தென்மேற்கு பருவக்காற்று ஜில்லுன்னு வீசுது... தமிழகத்தில் மழை ஜோரா பெய்யும் - வானிலை
தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜூன் 1ஆம் முதல் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் பல மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்தது. ஆறுகளில் வெள்ளம் பெருகியது. அணைகள் நிரம்பியுள்ளன. விவசாயப்பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் இந்த ஆண்டு குடிநீர் பஞ்சம் வர வாய்ப்பு இல்லை என்று பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவலாவில் 5 செ.மீ மழையும், பந்தலூர், மற்றும் தளி பகுதிகளில் தலா 2 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. மேலும், மேல் பவானி, அவலாஞ்சி, ஹாரிசன் எஸ்டேட், பிரையர் எஸ்டேட், ஏற்காடு பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்குவங்க கடலோரப் பகுதியில் வரும் ஆகஸ்டு 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தேர்தல் கமிஷனர் அசோக் லாவசா... ராஜினாமா... ஆசியன் வங்கி துணைத் தலைவராகிறார்!!
48 மணிநேரத்தில் மழை
இந்த நிலையில் இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.
லேசான மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெயக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் நிலவக்கூடும்.
வங்கக்கடலில் காற்றழுத்தம்
வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்குவங்க கடலோரப் பகுதியில் வரும் ஆகஸ்டு 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலுக்குள் போக வேண்டாம்
இன்று முதல் 20ம் தேதி வரை வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இன்றும் நாளையும் கோவா, மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று
ஆகஸ்டு 20 முதல் 22ம் தேதி வரை, வடக்கு மகாராஷ்டிரா, தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். ஆகஸ்டு 18 முதல் ஆகஸ்டு 22ம் தேதி வரை, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை
தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 19.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 1.5 முதல் 2.7 மீட்டர் வரை எழும்பக்கூடும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.