வங்கக் கடலில் உருவாகும் புயல்... ஆந்திரா ஒடிசாவில் மையம் கொள்ளும்...தமிழகத்தில் வெயில் சுடும்
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி புயலாக உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி மண்டலமாக மாறி புயலாக வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மே 10ஆம் தேதி அந்திரா - ஒடிஷா கடற்கரையையொட்டி புயல் மையம் கொள்ளும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் பல ஊர்களில் வெயில் சுட்டெரித்தாலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜார்,சாந்தி விஜயா பள்ளி, மசினகுடி , மேல் கூடலூரில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. வூட் பிரையர் எஸ்டேட், காரியர்கோவில் அணை, ஹரிசன் மலையாள லிமிடெட், செருமுள்ளியில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. தேவாலா, பார்வூட், ஜமுனாமரத்தூரில் தலா 2 செமீ மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தளி, சேலம் வீரகனூர், ஈரோடு தாளவாடியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்று காலை, தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும்.
ஆஹா.. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. ஒரு பக்கம் சூறாவளி.. மறுபக்கம் கத்திரி.. திணறும் தமிழகம்
புயலாக வலுப்பெறும் காற்றழுத்தம்
இது 08.05.2022 அன்று புயலாக மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து 10.05.2022 அன்று ஆந்திரா-ஒரிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடி மின்னலுடன் மழை
இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மிதமான மழைக்கு வாய்ப்பு
8 மற்றும் 9ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.10ஆம் தேதியன்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள்,
கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை உயரும்
அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
சூறாவளிக்காற்று
இன்றைய தினம் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளைய தினம் அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
பலத்த காற்று வீசும்
8ஆம் தேதி தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
Recommended Video
மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
9ஆம் தேதி மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 10ஆம் தேதியன்று மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மேற்குறிப்பிட்ட நாளில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.