இரும்பு கம்பியில் சிக்கிய குழந்தையின் தலை.. லாவகமாக பெற்றோர் செய்த செயல்! சென்னையில் திக்திக்
சென்னை: அண்ணா நகர் டவர் பூங்காவுக்குப் பெற்றோருடன் சென்றிருந்த 4 வயதுக் குழந்தையின் தலை அங்கிருந்த இரும்பு கம்பியில் சிக்கிக் கொண்டது. தலையை வெளியே எடுக்க முடியாததால் குழந்தை அழத் தொடங்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு கூட்டமும் கூடிய நிலையில், இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
குழந்தைகளை நாம் வெளியே அழைத்துச் சென்றால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. நாம் எவ்வளவு தான் எச்சரிக்கையாக இருந்தாலும் கூட சில நேரங்களில் குழந்தைகள் ஏதாவது செய்து பிரச்சினையில் மாட்டிக் கொள்வார்கள்.

அப்படியொரு சம்பவம் தான் சென்னையில் இப்போது நடந்துள்ளது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
டவர் பூங்கா: வீக் எண்ட் வந்தாலே பொதுவாக அனைவரும் குடும்பத்துடன் வெளியே செல்வார்கள். சென்னையில் இப்படி வெளியே செல்ல மெரினா. வண்டலூர் பூங்கா எனப் பல சுற்றுலாத் தலங்கள் இருக்கிறது. அதேபோல அண்ணா நகர் பகுதியில் உள்ள மக்கள் அதிகம் செல்லும் சுற்றுலாத் தலங்களில் ஒன்று டவர் பூங்கா.. வார இறுதி நாட்களில் பலர் டவர் பூங்காவுக்கு வந்து செல்வார்கள்.
கடந்த 2011ம் ஆண்டு இந்த பூங்கா மறுபுனரமைப்பு பணிக்காக மூடப்பட்ட நிலையில், அதன் பிறகு பல ஆண்டுகள் இது திறக்கப்படவே இல்லை. நீண்ட தாமதத்திற்குப் பிறகு கடந்தாண்டு மார்ச் மாதம் தான் இந்த டவர் பூங்கா மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது முதலே அதிகளவில் பொதுமக்கள் இந்த டவர் பூங்காவுக்கு வந்து சென்றனர்.
சிக்கிய தலை: அதேபோல இன்றும் பலர் பூங்கா டவருக்கு வந்தனர். அப்படி தான் பெற்றோர் ஒருவர் தங்கள் 4 வயதுக் குழந்தையுடன் பூங்காவுக்கு வந்திருந்தனர். டவர் மீது ஏறி அவர்கள் சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த பெண் குழந்தை இரும்பு கம்பிகளுக்கு நடுவே தலையை விட்டு இருக்கிறது. இதனால் எதிர்பாராத விதமாக அந்த பெண் குழந்தையின் தலை அங்கிருந்த இரும்பு கம்பிகளுக்கு இடையே சிக்கிக் கொண்டது.
சென்னை ஓஆர்ஆர்.. நகரத்தின் மொத்த லுக்கையே மாற்ற போகும் "ராட்சச" ரிங் ரோடு.. ரெடியான மாஸ்டர்பிளான்
தலையை வெளியே எடுக்க முடியாமல் அந்த குழந்தை கத்த தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். அங்கிருந்தவர்கள் குழந்தையின் தலையை வெளியே எடுக்க முயன்றனர். இருப்பினும், எடுக்க முடியவில்லை. இதனால் அங்கு மக்கள் திரண்டனர். அங்கிருந்த பலரும் குழந்தை பாதுகாப்பாக மீட்க முயன்றனர்.
லாவகமாக மீட்பு: இதை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுக்கத் தொடங்கிய நிலையில், பதற்றம் அதிகரித்தது. சில நிமிட போராட்டத்திற்குப் பிறகு குழந்தையின் பெற்றோரே குழந்தையை மீட்டனர். இதையடுத்து குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அருகே உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டது. இதில் குழந்தைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்றே தெரிகிறது. இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டான நிலையில், அண்ணா நகர் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications