சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு இன்று முதல் அமலானது! தமிழகத்தில் எங்கெங்கு, எவ்வளவு தெரியுமா! முழுவிபரம்
சென்னை: நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. இதன்மூலம் தமிழகத்தில் 27 சுங்கச்சாவடிகள் உள்பட இந்தியாவில் மொத்தம் 460க்கும் அதிகமான சுங்கச்சாவடிகளில் வாகன ஓட்டிகள் அதிக கட்டணம் செலுத்தி வருகின்றனர்.
Recommended Video
இந்தியாவில் நெடுஞ்சாலை பராமரிப்புக்காக வாகன ஓட்டுனர்களில் இருந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயரும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 460க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது.

கட்டண உயர்வு எவ்வளவு
அதன்படி கார் உள்ளிட்ட இலகு ரக வாகனங்களுக்கு ரூ.5 முதல் ரூ.10 வரையும், பஸ், டிரக்குகளுக்கு ரூ.15ம், 4 முதல் 6 டயர் கொண்ட வர்த்தக வாகனத்துக்கு ரூ.25ம், கனரக வாகனத்துக்கு ரூ.30ம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அமலில் இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் எங்கு உயர்வு
தமிழ்நாட்டில் 6,000 கிலோமீட்டருக்கு மேல் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 49 சுங்கச் சாவடிகள் உள்ளன. இதில் 27 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அதிகாலை முதல் அமலானது. அதன்படி திண்டிவனம் - ஆத்துார், போகலுார், பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலுார், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்துார், நல்லுார், நாங்குநேரி, ஸ்ரீபெரும்புதுார், பள்ளிக்கொண்டா, பரனுார், பட்டரை பெரும்புதுார், புதுக்கோட்டை - வாகைகுளம், எஸ்.வி.புரம், சாலைபுதுார், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலாகி உள்ளது.

கூடுதல் சுமை
இந்த சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் வாகன ஓட்டிகள் கூடுதல் கட்டண உயர்வை செலுத்தி செல்கின்றனர். ஏற்கனவே கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த நேரத்தில் தான் சுங்கச்சாவடி கட்டணமும் அதிகரித்துள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அத்தியாவசிய பொருள் விலை உயரலாம்
இதுதவிர அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து வந்த குடும்பங்கள் இப்போது தான் படிப்படியாக மீண்டு வருகின்றன. இந் நேரத்தில் இத்தகைய விலையேற்றம், கட்டண உயர்வு பொதுமக்களை வெகுவாக பாதிக்கலாம்.

திரும்ப பெற வலியுறுத்தல்
இதனால் சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். முன்னதாக மாநிலத்தில் 60 கி.மீ.க்குள் ஒரு சுங்கச்சாவடி மட்டுமே இயங்கும் என மத்திய சாலை பாதுகாப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ஆனால் இந்த பணி இன்னும் துவங்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் 16 சுங்கச்சாவடிகளை அகற்றும் பணி இன்னும் துவங்கவில்லை என மாநில நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications