இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. சென்னையில் எந்தெந்த டோல்கேட்டில் உயருது தெரியுமா?
சென்னை: நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. தமிழ்நாட்டில் முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. எங்கெங்கு என்பதை பார்க்கலாம்.
நாடு முழுவதும் 1000 க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், சுமார் 600 சுங்கச்சாவடிகளில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச் சாவடிகளில் இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்வதற்கு சுங்கக் கட்டணம் செலுத்துவது அவசியம். இந்த கட்டணம் ஆண்டுக்கு 2 முறை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் மாற்றி அமைக்கப்படுகிறது. ஏப்ரல் மாதமும், செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் அப்போது மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்தது.
இதனை தொடர்ந்து நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்றுடன் (ஜூன் 1) முடிவடைந்தது. இந்த நிலையில், ஜூன் 3 அதிகாலை 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படுகிறது. மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளிலும் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
மேலும், கல்லகம் - கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள மணகெதி, திருச்சி - கருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள கல்லக்குடி, வேலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் உள்ள வல்லம், திருவண்ணாமலை இனம் கரியாந்தல், விழுப்புரம் தென்னமாதேவி உள்ளிட்ட சுங்கச்சாவடிகளிலும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது.
சுங்கச்சாவடி கட்டண உயர்வுக்கு லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். சுங்கச்சாவடி கட்டண உயர்வு காரணமாக, லாரிகளில் ஏற்றி வரப்படும் பொருட்களின் விலையும் அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் பொதுமக்கள் மனதிலும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications