தக்காளி விலை கிடுகிடு உயர்வு.. சென்னை கோயம்பேடு சந்தையில் இன்று மேலும் 10 ரூபாய் அதிகரிப்பு!
சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரே நாளில் தக்காளியின் விலை மேலும் ரூ.10 உயர்ந்து ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ ரூ.70 முதல் 80 வரை விற்பனையாகிறது. மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் கிருஷ்ணகிரி, ஓசூர் ஆகிய இடங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு லாரிகளில் வந்து இறங்குகின்றன.
கோயம்பேடு சந்தைக்கு ஆந்திர மாநிலம் பலமனேரி, புங்கனூர், மதனபள்ளி பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலம் கோலார், சீனிவாசபுரம், சிந்தாமணி, ஒட்டிப்பள்ளி ஆகிய பகுதிகளிலிருந்தும் அதிக அளவில் தக்காளி விற்பனைக்கு வருகிறது.
பருவநிலை மாற்றத்தால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடக மாநிலங்களிலும் தொடர் மழை பெய்து வருவதன் எதிரொலியாக தக்காளியின் வரத்து சரிந்து விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
அதன்படி, சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை இன்று கிலோவுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.60ஆக விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தரம் 50 ரூபாய். மூன்றாம் தரம் 40 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. மொத்த விற்பனையில் ரூ.60-க்கும் சில்லறை விற்பனை கடைகளில் ரூ.70 முதல் ரூ.80 வரையும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.
உருளைக்கிழங்கு ரூ.30, ரூ.20, ரூ.18 என மூன்று விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் கிலோ ரூ.40, ரூ.50, ரூ.60 என்று விற்பனை செய்யப்படுகிறது. கத்தரிக்காய் 10 ரூபாய் உயர்ந்து 30 முதல் 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஊட்டி உள்ளிட்ட மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் காய்கறிகள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளதால் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளதாக மார்க்கெட் வியாபாரிகள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications