பல் வலியால் அவதிப்பட்டு வரும் முதலமைச்சர்... 'இம்பிளாண்ட்' சிகிச்சை அளித்த மருத்துவர் பாலாஜி
சென்னை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல் வலியால் அவதிப்பட்டு வரும் நிலையில் நேற்று மாலை மூன்றரை மணி நேரம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
உலகின் தலைசிறந்த பல் மருத்துவர்களில் ஒருவரான பாலாஜியின் பல் மருத்துவமனையில் வைத்து அவருக்கு சிகிச்சை நடந்துள்ளது.
முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டது 'இம்பிளான்ட்' சிகிச்சை என்பதால் அது முடிவடைய மூன்றரை மணி நேரம் கடந்ததாக கூறப்படுகிறது.
தோனியின் புகழை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடுவர்.. எடப்பாடி பழனிச்சாமி புகழாரம்
தீராத பல் வலி
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பல் வலியால் மிகவும் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் அவ்வப்போது சிகிச்சைகள் எடுத்துக்கொள்வது வழக்கம். சென்னை தேனாம்பேட்டையில் இயங்கி வரும் பாலாஜி பல் மருத்துவமனையில் தான் அவர் எப்போதும் சிகிச்சை பெறுவார். இவருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய பல் மருத்துவர் பாலாஜியை பொறுத்தவரை உலகின் டாப் 10 பல் மருத்துவர்களில் ஒருவர்.
வலியால் அவதி
இந்நிலையில் நேற்று சுதந்திர தின விழாவில் பல் வலியுடன் பங்கேற்ற முதல்வர், நேற்று நண்பகல் முதல் உட்கட்சி பஞ்சாயத்தையும் பல் வலியுடனே நடத்தியிருக்கிறார். இந்நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி நேற்று மாலை பாலாஜி பல் மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பல் பதியம் அதாவது டெண்டல் இம்பிளாண்ட் சிகிச்சை தரப்பட்டிருக்கிறது. இது அறுவைச் சிகிச்சை முறையாகும்.
3 நாட்கள் ஓய்வு
பல் அறுவைச் சிகிச்சை முடித்துள்ளதால் முதலமைச்சரின் முகத்தில் வீக்கம் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அவரை குறைந்தது மூன்று நாடகளுக்காவது ஓய்வில் இருக்குமாறு மருத்துவர் பாலாஜி அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்னும் ஓரிரு நாட்கள் வீட்டில் ஓய்வில் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
நலம் விசாரிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நலம் விசாரிக்க வேண்டி அழைப்புகள் வந்த வண்ணம் உள்ள நிலையில் அவரால் பேச முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. முகத்தில் லேசான வீக்கம் இருப்பதாலும், பல் அறுவைச் சிகிச்சை முடிந்துள்ளதாலும் அதற்கான வலி நிவாரணிகள் உட்பட மாத்திரைகளை உட்கொண்டு வருகிறார் முதலமைச்சர்.