மாவட்டமோ நகரமோ தூக்கியடிக்கும் திமுக..அதிரடி ஆக்ஷனில் முதல்வர் ஸ்டாலின்..அரண்டு போன முக்கிய“தலைகள்”
சென்னை : கட்சித் தலைமையின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதாக பூவிருந்தவல்லி நகர திமுக செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் பெருவெற்றி பெற்றன. எதிர்க்கட்சியான அதிமுக ஒரு மாநகராட்சியை கூட கைப்பற்ற முடியாத சூழல் ஏற்பட்டது.
தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளையும் திமுகவே கைப்பற்றிய நிலையில், நகராட்சி பேரூராட்சிகளிலும் அதிக இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களே வெற்றிக்கொடி நாட்டினர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
தொடர்ந்து மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர், துணைமேயர் துணைத்தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்பட இருந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு மேயர் பதவியை வழங்க திமுக முன்வரவில்லை. அதே நேரத்தில் ஒரு சில இடங்களில் நகராட்சித் தலைவர் பேரூராட்சித் தலைவர் நகராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை தங்களின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமை ஒதுக்கியது.

திமுகவினர் போட்டி
இந்த நிலையில் இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது கட்சித்தலைமை அறிவிப்பை மீறி ஏராளமான இடங்களில் திமுகவினர், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றினர். கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

ஸ்டாலின் அதிரடி
இதனை தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் கூட்டணி தர்மத்தை மீறி போட்டியிட்ட திமுகவினர் பதவியை ராஜினாமா செய்து, தன்னை சந்திக்க வேண்டுமென கூறினார். இதனால் கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. இதையடுத்து அதிரடி நடவடிக்கையில் திமுக தலைமை இறங்கியுள்ளது.

கட்சியிலிருந்து நீக்கம்
இந்நிலையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திமுகவின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கட்சி செயலாளர் என்.சுரேஷ்ராஜனை, அப்பொறுப்பிலியது விடுவித்து, அவருக்குப் பதிலாக ஆர். மகேஷ் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கட்சிப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்." என கூறப்பட்டுள்ளது. இதேபோல் பூவிருந்தவல்லி திமுக நகர செயலாளர் எம்.ரவிக்குமார் எனபவரும் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். திமுக அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து அதிருப்தி வேட்பாளரை பூவிருந்தவல்லி திமுக நகர செயலாளர் எம்.ரவிக்குமார் போட்டியிட வைத்ததால் கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications