கொங்கு மண்டலத்தில் கொட்ட போகுது மழை.! அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 7 மாவட்டங்களில் மழை பெய்யும்
சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்குத் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கோடைக் காலம் முடிந்துள்ள நிலையில், இப்போது நல்ல மழை பெய்து வருகிறது. இந்தாண்டு கோடைக் காலம் எப்படி இருந்தது என நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. பாதிப்பு ரொம்பவே மோசமாக இருந்தது.

ஜூலை இரண்டாம் வாரம் வரை கூட மிக கொடூரமான வெப்பம் தொடரவே செய்தது. அதன் பின்னரே தமிழ்நாட்டில் வெப்பம் தணிந்து மழை பெய்ய ஆரம்பித்தது. இப்போது பல இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் ஏற்கனவே பருவமழை ஆரம்பித்துவிட்டது. இதனால் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தைப் பொறுத்தவரைச் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அதிகபட்சமாக 110 மிமீ மழை பெய்துள்ளது. அதேபோல புதுக்கோட்டை அரிமளத்தில் 80 மிமீ மழை பதிவாகியுள்ளது.
7 மாவட்டங்களில் மழை: இப்படி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதற்கிடையே அடுத்த 3 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், இன்று (ஜூலை 11) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
வானிலை மையம்: அதேபோல நாளை (ஜூலை 12) : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் ஜூலை 13 முதல் 17 வரையிலான நாட்களில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்படி தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழை காரணமாக வெப்பம் தணிந்துள்ள நிலையில், பொதுமக்கள் செம ஹேப்பியில் இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications