கொரோனாவை கட்டுப்படுத்த.. 15 நாட்களுக்கு சென்னையில் முழு கடையடைப்பு செய்ய தயார்.. வணிகர் சங்கம்
சென்னை: சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அரசு உத்தரவிட்டால் 15 நாட்கள் கடைகளை அடைக்க தயாராக உள்ளதாக வணிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 23-ஆம் தேதி முதல் அமலில் உள்ள லாக்டவுனில் 5ஆவது கட்டம் அமல்படுத்தப்பட்ட போது தமிழக அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 36,841 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 1,927 பேருக்கு தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதில் சென்னையில் மட்டும் 1,390 பேராகும். இதுவரை சென்னையில் 25,937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 31-ஆம் தேதி முதல் தினமும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டி வருகிறது. நேற்றைய தினம் 2,000-த்தை நெருங்கியது. இதனால் தமிழகத்தில் 144 தடை உத்தரவு போட வேண்டும் என மருத்துவ நிபுணர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பிற மாவட்டங்களுக்கு செல்ல இ பாஸ் ரத்து.. தனிமைப்படுத்தப்படும் தலைநகரம்.. முழு ஊரடங்கை நோக்கி சென்னை?
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் முழு லாக்டவுன் அதாவது 144 தடையுத்தரவு போடப்படும் என தகவல்கள் வந்துள்ளன. இதுகுறித்து உயர்நீதிமன்றமும் தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.
இந்த நிலையில் அரசு உத்தரவிட்டால் சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் 15 நாட்கள் கடைகளை அடைக்கத் தயார் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவித்துள்ளது.