சம்பவ இடத்தை நெருங்கிய சென்னை மெட்ரோ.. இன்று முதல் கத்திப்பாரா டூ பரங்கிமலை ரூட்டே மாறுது
சென்னை: சென்னை பரங்கிமலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலை, புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரெயில் திட்டப்பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை மூன்று நாட்கள் பரங்கிமலையில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ முதற்கட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தை பொறுத்தவரை மாதவரம் பால் பண்ணை - சோழிங்கநல்லூர் சிப்காட் வரையிலும், 4-ஆவது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டா் தொலைவுக்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலும், 5-ஆவது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கு மாதவரம் - சோழிங்கநல்லூா் வரையிலும் மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதில் பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடம் சென்னையின் மையப்பகுதியில் செல்கிறது. இந்த வழித்தடம் பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் வரை மேம்பால பாதையாகவும், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுரங்கப் பாதையாகவும் வழித்தடம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ரூ.187 கோடி செலவில் பூந்தமல்லியில் 2-ஆவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் பணிமனைக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் 5வது மெட்ரோ வழித்தட மாதவரம் பால் பண்ணை மற்றும் சோழிங்கநல்லூர் இடையே அமைகிறது. 44 .6 கிமீ தூரத்திற்கு அமையும் இந்த வழித்தடத்தில் 38.77 கிமீ தூரம் மேம்பாலத்திலும், 5.83 கிமீ தூரம் நிலத்திற்கு அடியிலும் அமைகிறது. இந்த வழித்தடத்தில் 48 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம் தான் மிக முக்கியமான ஐடி நிறுவனங்களை இணைக்கிறது. மவுண்ட், கத்திப்பாரா, நந்தம்பாக்கம் பகுதிகளை இணைக்கிறது. இந்த பணிகளுக்காக போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது,.
சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “சென்னை பரங்கிமலையில் மவுண்ட்- பூந்தமல்லி சாலை, புகாரி ஓட்டல் சந்திப்பு முதல் கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரெயில் திட்டப்பணிகளுக்காக இன்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை என 3 நாட்கள் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது.
கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து போரூர் செல்லும் வாகனங்களில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம் போல் இயக்கப்படும். போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் பெல் ராணுவ சாலை சந்திப்பில் உள்ள மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலாக புதிய சாலையை நோக்கி இடதுபுறம் திரும்பி, புகாரி ஓட்டலுக்கு எதிரே உள்ள போர் கல்லறை - ராணுவ சாலை சந்திப்பில் டிபென்ஸ் காலனி 1-வது அவென்யூ வலதுபுறம் திரும்பி கண்டோன்மென்ட் சாலை இடதுபுறம் திருப்பி சுந்தர் நகர் 7-வது குறுக்கு தனகோட்டி ராஜா தெரு வழியாக கிண்டி தொழிற்பேட்டை எஸ்டேட் தெற்கு கட்ட சாலை 100 அடி சாலை சந்திப்பு சென்று வாகனங்கள் கத்திப்பாரா மேம்பாலத்தை அடைய வலதுபுறமாகவும், வடபழனியை அடைய இடதுபுறமாகவும் நோக்கிச் செல்லலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications