ஸ்தம்பித்த திருச்சி - சென்னை ஹைவே.. 5 கி.மீக்கு அணிவகுத்த வாகனங்கள்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி
விழுப்புரம்: விழுப்புரம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 5 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்ரீத் பண்டிகை, தொடர் முகூர்த்த நாட்கள் மற்றும் வார விடுமுறை என்பதால் கடந்த 4 ஆம் தேதியில் இருந்து சென்னையில் வசித்து வருபவர்கள், சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் சென்னை கிளாம்பாகத்தில் இருந்து தென் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது.

அலைமோதிய பயணிகள் கூட்டம்
குறிப்பாக கிளாம்பாக்கத்தில் போதிய பஸ் வசதிகள் இல்லையென பயணிகள் போராட்டம் செய்து இருந்தனர். அதிமுக மற்றும் தவெக கட்சிகளும் இது தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தன. எனினும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் வார விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகம் செல்ல வேண்டும் என்பதற்காக சொந்த ஊர் சென்றவர்கள் இன்று சென்னை திரும்பி வருகிறார்கள். இதனால் தென்மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று இரவு நெல்லை ரயில் நிலையம், பேருந்து நிலையத்தில் வழக்கத்துக்கு மாறாக பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருச்சி டூ சென்னை நெடுஞ்சாலை
இதேபோன்று ஆம்னி பஸ்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்து இருந்தது. இருந்தாலும் சென்னை செல்ல வேண்டும் என்பதற்காக கட்டணத்தை பார்க்காமல் புக் செய்து பயணம் செய்து வருகிறார்கள். இது போக சொந்த வாகனத்திலும் பலர் சென்னை திரும்புகிறார்கள். இதனால் திருச்சி டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் பயணிகள் அதிகம் பேர் சென்னை திரும்புவதால், குறிப்பாக நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், திருச்சி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வாகனங்களும் சென்னை செல்வதற்கு திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தான் பயன்படுத்துகிறார்கள். இதனால் திருச்சியில் இருந்து சென்னை வரை நெடுஞ்சாலையில் வாகனங்கள் அணிவகுத்து வருகின்றன.
வாகன ஓட்டிகள் கடும் அவதி
இந்த நிலையில் இன்று இரவு 9 மணியளவில் விழுப்புரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடையிடையே மழையும் பெய்ததால் வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மெதுவாக ஊர்ந்தபடி சென்றன. நேரம் செல்ல செல்ல சுமார் 5 கிமீ தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்தன. ஆமை வேகத்தில் வாகனங்கள் சென்றதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
போக்குவரத்து நெரிசலை சரி செய்ய போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர். லாரி, கார், பஸ், வேன்கள் அணிவகுத்து நிற்பதால் நீண்ட நேரமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. விழுப்புரத்திலேயே இந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால், நாளை அதிகாலை சென்னையில் போக்குவரத்து நெரிசல் எப்படி இருக்குமோ என நினைத்து வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications