சென்னையில் நடுரோட்டில் கட்டிப்புரண்டு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்டை.. அதிர்ந்த பொதுமக்கள்
சென்னை: சென்னை கொத்தவால்சாவடியில் நடுரோட்டில் கட்டிப்புரண்டு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்டையிட்டனர். பொதுமக்கள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது..
சென்னையில் போக்குவரத்து போலீசார் தான் தினமும் காலையிலும் மாலையிலும் வாகன சோதனை நடத்துவார்கள். காலை நேரங்களில் பரபரப்பாக கிளம்புவோர் கண்டிப்பாக தலைகவசம் அணிந்திருக்க வேண்டும். பின்னால் அமர்ந்திருப்பவரும் கண்டிப்பாக தலைகவசம் அணிந்திருக்க வேண்டும். அப்படி தலைகவசம் அணியாவிட்டால் வாகனத்தை நிறுத்தி போலீசார் அபராதம் விதிப்பார்கள்.

இதேபோல் கார்களில் பயணிப்போர் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். சான்றிதழ்களை சரியாக வைத்திருக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்கள் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றக்கூடாது, சரக்கு வாகனங்கள் பீக் அவர்ஸில் வரக்கூடாது. அப்படி வந்தால் அபராதம் விதிப்பார்கள். இதுபோன்ற வாகன சோதனைகளை சென்னை முழுவதும் பல்வேறு போக்குவரத்து காவல் நிலையங்களில் உள்ள போலீசார் மேற்கொள்வது வழக்கம்.
அப்படி வாகன சோதனை செய்யும் போலீசாருக்கு அபராதம் விதிக்க அபராத கருவியை பயன்படுத்துவார்கள். இந்த கருவிகளை பொதுவாக இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்நிலையில் அபராத கருவி விவகாரத்தில் தகராறு முற்றி சென்னை கொத்தவால்சாவடியில் நடுரோட்டில் சாலையில் கட்டிப்புரண்டு போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்டையிட்டுள்ளார்கள்.
சென்னை கொத்தவால்சாவடி போக்குவரத்து போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரான பிரபு, வெள்ளிக்கிழமை பிற்பகல் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் கருவியை போக்குவரத்து போலீஸ்காரர் அழகு முருகனிடம் கொடுத்து வாகனங்களை மடக்கி அபராதம் விதிக்கும் படி கூறிவிட்டு வெளியில் சென்று விட்டார். ஆனால் அந்த கருவியை இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மட்டும் பயன்படுத்த வேண்டும் என விதி உள்ள நிலையில், போலீஸ்காரர் அழகு முருகன் அபராத கருவியை பயன்படுத்தியது பற்றி அறிந்த கொத்தவால்சாவடி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதுரை, சப்-இன்ஸ்பெக்டர் பிரபுவை கண்டித்திருக்கிறார்.
இதனால் மனவேதனை அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரபு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்தான் இதுபற்றி இன்ஸ்பெக்டரிடம் கூறிவிட்டதாக நினைத்த பிரபு, இதுபற்றி கொத்தவால்சாவடியில் பிரகாசம் சாலையில் நின்றிருந்த வெங்கடேசனிடம் கேட்டு வாக்குவாதம் செய்தாராம். இருவருக்கும் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியிருக்கிறதுது.
பொதுமக்கள் முன்னிலையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதுடன், சாலையில் இருவரும் கட்டிப்புரண்டு உருண்டதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே சப் இன்ஸ்பெக்டர்கள் 2 பேர் மீதும் துறை ரீதியாக விசாரணை நடத்தப்படும் என இன்ஸ்பெக்டர் ராமதுரை கூறினார்.












Click it and Unblock the Notifications