கள்ளக்குறிச்சி புதுமாப்பிள்ளை.. பத்திரிகை கொடுக்க போகும்போது இப்படியா ஆகனும்! துடிதுடித்த 3 உயிர்கள்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கல்யாண வீட்டில் நடக்கக் கூடாத துயர சம்பவம் நடந்துள்ளது. திருமண வரவேற்பிற்காக பத்திரிகை கொடுக்க உறவினர்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. புதுமாப்பிள்ளை மட்டும் இன்றி அவரது தாய் தந்தையும் துடிதுடித்து விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. புதுமாப்பிள்ளையான நாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும் கூட.
கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டுச்சாலையை அடுத்த மாடாம்பூண்டியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 42). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சென்னியம்மாள். இவர்களது மகன் நாராயணன் (22). முத்திருத்தும் வேலை செய்து வந்தார். கள்ளக்குறிச்சி மாவட்ட தவெக நிர்வாகியாக இருந்து வந்தார்.

கள்ளக்குறிச்சி தவெக நிர்வாகி
நாராயணனுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. திருமணத்தை சிம்பிளாக நடத்தியதாக தெரிகிறது. இதனால் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக வரும் 4 ஆம் தேதி திருமண வரவேற்பு விழா திருக்கோவிலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறவிருந்தது. இதனால் அவரது குடும்பத்தினர் திருமண வரவேற்புக்காக அழைப்பிதழ் கொடுத்து வந்தனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் நாராயணன் தனது தாய் மற்றும் தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வந்தார். அந்த வகையில், இன்று ஒரே மோட்டார் சைக்கிளில் புதுமாப்பிள்ளை உட்பட 3 பேரும் சங்கராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு மாடாம்பூண்டி நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர்.
3 பேரும் உயிரிழப்பு
பகண்டை கூட்டு சாலை புற்று மாரியம்மன் கோவில் பகுதியில் வந்தபோது, எதிரே வந்த கார் ஒன்று இவர்களது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பைக்கில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். காரின் முன்பகுதியும் சேதமடைந்தது. இதையடுத்து படுகாயத்துடன் கிடந்த 3 பேரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்கள் 3 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே புதுமாப்பிள்ளை விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications