இப்படியுமா மரணம் வரும்.. கிரிக்கெட் வெற்றியை கொண்டாடும் போது போன உயிர்.. சென்னையில் நடந்த துயரம்!
சென்னை: சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டை பார்த்து கொண்டிருந்த 25 வயது வாலிபர் ஒருவர், தனது நண்பர்கள் டீம் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியில் கொண்டாடியபோது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதேபோன்று சென்னையில் விளையாட்டு மைதானத்தில் பேட்மிண்டன் விளையாடிய நபரும் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சமீப காலமாக உடற்பயிற்சி செய்யும் போது, பாட்டு பாடும் போது இளைஞர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று சென்னையில் கிரிக்கெட் விளையாட்டை பார்த்து ரசித்துக்கொண்டிருந்த வாலிபர் ஒருவர், தனது நண்பர்கள் டீம் வெற்றி பெற்றதை எமோஷனலாக கொண்டாடியபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதேபோன்று பேட்மிண்டன் விளையாடிய நபர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர் கார்த்தி (வயது 25). இவரது சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ஆகும். பணியின் காரணமாக சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். இவர் பணியாற்றி வரும் நிறுவனத்தின் சார்பில் சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.
இன்று காலையிலும் சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த போட்டியில் கார்த்தி பங்கேற்கவில்லை. அவரது நண்பர்கள் அடங்கிய அணி பங்கேற்று இருந்தது. அந்த அணிக்கு ஆதரவு தெரிவித்து பார்வையாளராக நின்று கொண்டிருந்தார். தனது நண்பர்களின் அணியை கை தட்டி மிகுந்த ஆர்வத்துடன் ஊக்கப்படுத்தி வந்தார்.
கிரிக்கெட்டை பார்த்து ரசித்தவர் உயிரிழப்பு
இறுதியில் இவரது நண்பர்கள் அணி வெற்றி பெற்றது. இதனால் சந்தோஷத்தில் துள்ளி குதித்த கார்த்தி வெற்றியை கொண்டாடினார். மைதானத்தில் இறங்கி தன் நண்பர்களுடன் ஆக்ரோஷமாக கத்தியபடி வெற்றியை கொண்டாடினார். அப்போது, திடீரென கார்த்தி மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், கார்த்தியை எழுப்பி பார்த்தனர். ஆனால் அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தது தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு கால் செய்து வரவழைத்து, கார்த்தியை அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைந்தனர். கிரிக்கெட் விளையாட்டை உற்சாகத்தோடு பார்த்து கொண்டாடிய இளைஞர் திடீரென மயக்கம் போட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சைதாப்பேட்டை போலீசார் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
பேட்மிண்டன் விளையாடியவர் உயிரிழப்பு
இதேபோன்று சென்னை அண்ணா சாலை மன்றோ சிலை எதிரே உள்ள ராணுவ மைதானத்தில் பேட்மிண்டன் விளையாடிய ஜான்சன் தாமஸ் (வயது 50) என்பவர் திடீரென மயக்கமடைந்து உயிரிழந்துள்ளார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் முன்னாள் படை வீரர்கள் பிரிவு அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், சென்னை தீவுத்திடல் அருகே அமைந்துள்ள அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம்போல் இன்று ராணுவ மைதானத்தில் பேட்மிண்டன் விளையாடினார். அப்போது தண்ணீர் தாகம் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து தண்ணீர் குடித்துவிட்டு அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தார். திடீரென அவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தார். இதனால் பதறிப்போன அங்கிருந்தவர்கள், உடனே அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தாமஸ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக திருவில்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications