மின்னல் வேகம்.. சென்னை டூ கோவை.. வெறும் 6 மணி நேரத்தில் பாய்ந்த வந்தே பாரத்! இன்று சோதனை ஓட்டம்
சென்னை: சென்னை கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை இன்னும் சில நாட்களில் தொடங்கப்பட உள்ளது. இதனிடையே இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று நடந்துள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்
சர்வதேச அளவில் மிகப் பெரிய ரயில் நெட்வோர்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. நமது நாட்டில் பெரும்பாலான முக்கிய பகுதிகளுக்கு ரயில் சேவை இருக்கவே செய்கிறது.
இருப்பினும், கடந்த சில காலமாகவே இந்திய ரயில்வே பெரியளவில் முன்னேறவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து கொண்டே இருந்தது. ரயிலில் இருக்கும் வசதிகள் குறித்தும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.

வந்தே பாரத்
அதைப் போக்கும் வகையில் கடந்த சில காலமாக நவீன வசதிகளைக் கொண்ட ரயில்களை இந்தியன் ரயில்வே இறக்கியுள்ளது. அதில் குறிப்பாக வந்தே பாரத் ரயில் பலரது கவனத்தையும் ஈர்ப்பதாக உள்ளது. முற்றிலும் குளிர்சாதன வசதி கொண்ட, இந்த ரயில்கள் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள அதிவேக ரயிலாகும். ஐசிஎஃப் தொழிற்சாலையில் தான் இவை தயாரிக்கப்பட்டன. வந்தே பாரத் ரயில்களுக்கு பொதுமக்களிடையே மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

400 ரயில்கள்
இப்போது நாடு முழுக்க 10 வழித்தடங்களில் இந்த வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னை- பெங்களூர்- மைசூர் இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்திருந்தார். இதேபோல நாடு முழுக்க பல வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வரும் காலத்தில் நாடு முழுக்க 400 வந்தே பாரத் ரயில்களை இயக்க திட்டமிட்டுள்ள இந்தியன் ரயில்வே, அதற்கான வழித்தடங்களைக் கண்டறிந்து ரயில்களை இயக்கி வருகிறது.

சென்னை கோவை வந்தே பாரத்
அதன்படி தமிழ்நாட்டில் மிக விரைவில் இரண்டாவது வந்தே பாரத் ரயில் வரவுள்ளது. சென்னை மற்றும் கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலை வரும் ஏப்ரல் 8ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். சென்னைக்கும் கோவைக்கும் இடையே ஏற்கனவே இரண்டு இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சகாப்தி ரயில் இயக்கப்படுகிறது. இது தவிர மற்ற ஊர்களுக்கு இடையே இயக்கப்படும் பல ரயில்களும் சென்னை கோவை இடையே நின்று செல்கிறது.

சோதனை ஓட்டம்
இந்தச் சூழலில், சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயலின் சோதனை ஓட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த வந்தே பாரத் ரயில் சரியாகக் காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டது. சரியாக இது காலை 8 மணிக்கு ஜோலார்பேட்டை வந்தடைந்தது. அங்கிருந்து புறப்பட்ட ரயில், 11.40 மணிக்குக் கோவை சென்றடைகிறது. இது சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று சென்றது.

தொழில்நுட்ப பிரச்சினை
அதேபோல மதியம் 12.40 மணிக்கு இந்த ரயில் கோவையில் இருந்து கிளம்புகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டையில் நின்று வரும் வந்தே பாரத், மாலை 6.40 மணிக்குச் சென்னை வந்தடைகிறது. இந்த சோதனை ஓட்டத்தின்போது, ரயிலில் எதாவது தொழில்நுட்ப பிரச்சினைகள் ஏற்படுகிறதா என்பது குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது. இந்த சோதனையின் போது தென்னக ரயில்வேயை சேர்ந்த பல முக்கிய அதிகாரிகள் இருந்தனர்.

சரியாக 6 மணி நேரம்
இந்த வந்தே பாரத் ரயில்கள் கடந்த 2019ஆம் ஆண்டு முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டன. இதில் என்ஜின் தனியாக இல்லாமல் ரயிலுடன் இணைக்கப்பட்டிருக்கும், மேலும், தானியங்கி கதவுகள், ஏசி, வைஃபை, பயோ-கழிவறைகள் என பல நவீன வசதிகள் உள்ளன. சென்னை கோவை இடையே 495 கிமீ உள்ள நிலையில், அதை இன்டர்சிட்டி ரயில்கள் மூலம் கடக்க 7.50 மணி நேரம் வரை ஆகிறது. சதாப்தி ரயில் 7 மணி நேரம் ஆகும் நிலையில், இன்று சோதனை ஓட்டத்தில் சரியாக 6 மணி நேரத்தில் அது சென்னையில் இருந்கு கோவை சென்றடைகிறது.












Click it and Unblock the Notifications