கண்ட காட்சி உண்மைதானா.. ரயிலின் மேல் படுக்கையில் பயணி செய்த காரியம்! நொந்து பதிவிட்ட நெட்டிசன்கள்
சென்னை: இந்தியாவில் ரயில்களில் பயணிகள் செய்யும் சிலர் நடந்து கொள்வது மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிப்பதாக இருப்பதை பார்க்க முடியும். குறிப்பாக வட இந்தியாவிற்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு செய்தால் கூட இருக்கைக்கு உத்தரவாதம் இல்லாத நிலைதான் உள்ளது என்று பயணிகள் ஆதங்கப்படுவதை பார்க்க முடியும்.. ஆனால் இதற்கெல்லாம் சற்றும் சளைக்காத வகையில் பெங்களூர் ரயில் ஒன்றில் பயணி செய்த காரியம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி வருகிறது. இதுபற்றிய விவரங்களை பார்க்கலாம்.
இந்தியாவில் சாமான்ய மக்கள் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைத்து தரப்பினரும் பயன்படுத்தக்கூடிய போக்குவரத்து அமைப்பாக ரயில்கள் உள்ளன. டிக்கெட் கட்டணம் குறைவு, பாதுகாப்பான பயணம் என்பதால் ரயில் பயணம் பலருக்கும் விருப்பமானதாக உள்ளது.

ரயிலில் இருக்கைகள் ஆக்கிரமிப்பு
அதுவும் தொலைதூரங்களுக்கு செல்வது என்றால் வேறு ஆப்ஷனே கிடையாது. கழிவறை வசதி இருப்பதால் ரயிலில் நிம்மதியாக செல்லலாம் என்று கருதி, டிக்கெட் இருப்பதை பொறுத்தே தங்கள் பயணத்தை திட்டமிடுவார்கள். எப்படியோ அடித்துப்பிடித்து ரயிலில் ஏறினாலும், தற்போது ரயிலில் நடக்கும் சில நிகழ்வுகள் பயணிகளுக்கு தங்கள் பயணத்தையே வெறுக்க வைக்கும்.
ரிசர்வேஷன் பெட்டிகளில் கூட முன்பதிவு இல்லாத டிக்கெட்டை எடுத்துக்கொண்டு ஆக்கிரமிக்கப்படுவது போன்ற செயல்கள் பயணத்தையே வெறுக்க வைக்கும். அது மட்டும் இன்றி சில இளைஞர்கள் இரவு பயணத்திலும் கூட மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கத்திக்கொண்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
பயணிகள் குற்றச்சாட்டு
குறிப்பாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் நிலைமை பற்றி தனியாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒருமுறை வட இந்திய ரயில்களில் சென்று விட்டு வந்தாலே ரயில் பயணமே வேண்டாம் என நினைக்கும் அளவுக்கு நிலைமை ஆகிவிடும் என்று பயணிகள் பலரும் கூறுகிறார்கள்.
அதாவது, ரயிலுக்குள் தொட்டில் கட்டிக்கொண்டு அதில் படுத்து உறங்குவது, முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்த பயணிகளுக்கே இடம் கொடுக்காமல் ஆக்கிரமிப்பது என அலட்சியம் செய்வதாக பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக இருக்கிறது.
உள்ளாடைகளை காய வைத்த பயணி
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக இணையத்தில் பரவும் ஒரு புகைப்படம் ரயில் பயணிகளிடையே விவாதத்திற்குள்ளாகியுள்ளது. பெங்களூர் - ஜெய்பூர் சூப்பர் பாஸ்ட் ரயிலில் பயணி ஒருவர் அப்பர் பெர்த் படுக்கையில் தனது உள்ளாடைகளை ஃபேனுக்கு கீழ் காயவைத்து இருந்தார்.
இதுகுறித்த புகைப்படத்தை பதிவிட்ட நெட்டிசன் ஒருவர், "சக பயணி ஒருவருக்கு ஏசி டிக்கெட் கிடைக்கவில்லை. இருந்தாலும் அவருக்கு இலவசமாகவே லாண்டரி சர்வீஸ் கிடைத்துவிட்டது" என்று பதிவிட்டுள்ளார். நெட்டிசன்கள் சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு பதிவிட்டு வரும் நிலையில், சில நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தும் பதிவிட்டு இருக்கிறார்கள்.
நெட்டிசன்கள் சரமாரி கருத்து
அடிப்படை பொது அறிவு கூட இல்லாத நபராக இந்த பயணி இருக்கிறார் என்றும் சில நெட்டிசன்கள் விமர்சித்து வருகிறார்கள். ரெட்டிட் சமூக வலைத்தளத்தில் இந்த பதிவை பகிர்ந்து இருந்த நெட்டிசன் ஒருவர் கடந்த மாதம் 15 ஆம் தேதி காலை 10 மணியளவில் இந்த நிகழ்வு நடைபெற்றதாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவுதான் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது குறித்து நெட்டிசன் ஒருவர் கூறுகையில், "இது ரொம்ப புது டெக்னிக்காக இருக்கு... எதை பற்றியும் யாரை பற்றியும் கவலைப்படாத நபர்கள். ஒன்றும் சொல்வதற்கு இல்லை" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "என் நாடு வேகமாக முன்னேறி கொண்டு இருக்கிறது" என ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications