மும்மொழி கொள்கை விவகாரத்தில் நாளை மறுநாள் முதல்வர் விளக்கம்.. அமைச்சர் செங்கோட்டையன்
சென்னை: ஒரு சில பள்ளிகளில் கிடைக்க பெறாமல் உள்ள புத்தகங்கள் விரைவில் கிடைக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறந்து ஒரு மாதமாகியும், புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்டுள்ள மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் இணையதளத்திலிருந்து பாடங்களை டவுன்லோட் செய்து வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இதனால் மாணவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் சென்னை அரசு தலைமைசெயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பதாக கூறினார்.
புத்தக தயாரிப்பில் ஈடுபட்ட கல்வியாளர்கள் விரைவாக செயல்படாததால், இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர், அடுத்த கல்வியாண்டில் அத்தனை குளறுபடிகளையும் சரி செய்வோம் என கூறினார்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளுக்கு புத்தகங்கள் சென்றடைந்து விட்டதாக கூறிய அவர், மூன்றாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு, குறிப்பிட்ட சில பாடபுத்தகங்கள் சென்றடையவில்லை என புகார் வந்துள்ளது.
எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அச்சம் தேவையில்லை. ஏனெனில் ஆன்லைன் மூலம் அவர்கள் பாடங்களை படித்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது என்றார். மொபைல் மற்றும் கணினிகளில் தரவிறக்கம் செய்தும் மாணவர்கள் படித்து கொள்ளலாம் எனவும் கூறினார்.
இதுவரை தனியார் பங்களிப்பாக ரூ.102 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. அதை கொண்டு அரசு பள்ளிகளுக்கான புதிய கட்டிடங்கள், கழிப்பிட வசதிகள், சுற்றுசுவர்கள், ஆய்வுக்கூடங்கள் என பல்வேறு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன என தெரிவித்தார்
மேலும் பேசிய அமைச்சர் மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்வி கொள்கை குறித்து கருத்து தெரிவிக்க கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிரதமருக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட உள்ளதாக குறிப்பிட்டார். மும்மொழி கல்வி கொள்கை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து முதலமைச்சர் நாளை மறுநாள் அறிவிப்பார் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே தமிழகத்தில் 2016-19-ல் படித்து முடித்த 1, 53,359 மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்க அரசு ஆணை வெளியிட்டது. கடந்த 2016-17, 2017-18 மற்றும் 2018-19 ல் படித்த, படித்துக்கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணிணி வழங்கப்படும் என்றார்.