"கோட் ரெட்.." டிரம்ப் வரியால் இந்தியாவில் எந்த துறைகளில் பாதிப்பு மிக மோசமாக இருக்கும்! பகீர் டேட்டா
வாஷிங்டன்: இந்தியா மீது அமெரிக்கா 50% வரியை விதித்துள்ளது. இந்தக் கூடுதல் வரியால் இந்தியாவில் பல்வேறு துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என அஞ்சப்படுகிறது. டிரம்ப்பின் இந்த வரியால் துறை வரியாகப் பாதிப்புகள் எப்படி இருக்கும்.. எந்தத் துறையில் பாதிப்பு மோசமாக இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
டிரம்ப் வரியால் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு தற்போது இந்த வரி விதிப்புக்குள் வந்துள்ளது. அதாவது இந்தியா ஆண்டுதோறும் சுமார் $86.5 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இதில் மூன்றில் இரண்டு பங்கு, அதாவது சுமார் $60.2 பில்லியன் மதிப்புள்ள பொருட்களுக்கு இனி 50% வரி விதிக்கப்படுவதாக GTRI எனப்படும் குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் தெரிவித்துள்ளது.

டிரம்ப் வரி
அமெரிக்காவின் இந்த புதிய வரிகளால் இந்தியாவில் வேலை இழப்புகளும் பொருளாதார மந்தநிலையையும் ஏற்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குறிப்பாக ஜவுளி, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், தோல் பொருட்கள், உணவு மற்றும் ஆட்டோமொபைல்கள் உள்ளிட்ட துறைகள் அதிகம் பாதிக்கப்படும் என ஜிடிஆர்ஐ தெரிவித்துள்ளது. இந்தத் துறைகளின் ஏற்றுமதி $60.2 பில்லியனிலிருந்து அதிகபட்சமாக 70% வரை சரிந்து $18.6 பில்லியனாகக் குறையக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
ஏன் சிக்கல்
அமெரிக்காவுக்கான ஒட்டுமொத்த ஏற்றுமதி 43% சரியும் ஆபத்து இருப்பதால் இந்தியாவில் இதனால் வேலையிழப்புகளும் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. மேலும், சீனா (30%), வியட்நாம் (20%), இந்தோனேசியா (19%), ஜப்பான் (15%) போன்ற பிற ஆசிய நாடுகளை விட இந்தியாவுக்கு அதிக வரி விதிக்கப்படுகிறது. இதனால் அந்த நாடுகளுடன் நம்மால் போட்டி போட முடியாத சூழல் ஏற்படும். இது சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளுக்கே நன்மையைத் தரும். இதற்கிடையே டிரம்ப் வரியால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளை நாம் பார்க்கலாம்.
எந்த துறைகளில் பாதிப்பு இருக்கும்
முதலில் இறால் ஏற்றுமதி.. 2025ல் அமெரிக்காவிற்கு $2.4 பில்லியன் மதிப்புள்ள இறால்களை இந்தியா ஏற்றுமதி செய்தது. இது மொத்த இறால் ஏற்றுமதியில் 32.4% ஆகும். முழு இறால், உரிக்கப்பட்ட மற்றும் நரம்பு நீக்கப்பட்ட இறால் என பல வகையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. டிரம்ப் வரியால் இது கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணைகள், விசாகப்பட்டினம் மற்றும் மேற்கு கோதாவரியில் உள்ள பதப்படுத்தும் மையங்கள் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது. மறுபுறம் ஈக்வடார், வியட்நாம், இந்தோனேசியா நாடுகளுக்கு இது சாதகமாக இருக்கும்.
அடுத்து ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை.. இந்தியாவில் இருந்து சுமார் $10 பில்லியன் மதிப்பிலான ரத்தினங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படுகிறது. அதாவது இந்தியாவின் ரத்தின ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 40% அமெரிக்காவுக்குச் செல்கிறது.. இப்போது ரத்தினங்களுக்கு 2.1% வரி விதிக்கப்படும் நிலையில், அது 52.1%ஆக உயர்கிறது. இதனால் ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் துறை மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.. சூரத், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள பல லட்சம் பேர் இதனால் பாதிக்கப்படலாம்.
திருப்பூர் பெல்ட்
மற்ற துறைகளை விட ஜவுளி துறை தான் மோசமான பாதிப்பைச் சந்திக்கும். ஏனென்றால் 2025ல் அமெரிக்காவிற்கான இந்திய ஜவுளி ஏற்றுமதி $10.8 பில்லியனாக இருந்தது. இந்தியாவின் ஒட்டுமொத்த ஆடை ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 35%ஆக இருந்தது. இதற்கான வரிகள் 13.9%இலிருந்து 63.9%ஆக உயர்வதால் பாதிப்பு மோசமாக இருக்கும். தமிழகத்தின் திருப்பூர் பெல்ட், நொய்டா குருகிராம், லூதியானா எனப் பாதிப்பு பரவலாக இருக்கும். இது பங்களாதேஷ், வியட்நாம், மெக்சிகோ நாடுகளுக்கு லாபத்தைக் கொடுக்கும்.
அதேபோல 2025ல் நாம் அமெரிக்காவுக்கு $1.2 பில்லியன் மதிப்பில் கம்பளங்களை ஏற்றுமதி செய்துள்ளோம். இந்தியாவின் ஒட்டுமொத்தக் கம்பள ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 58.6%ஆகும். இதற்கான வரிகள் 2.9% இலிருந்து 52.9%ஆக உயர்வதால் பதோஹி, மிர்சாபூர் மற்றும் ஸ்ரீநகர் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இது துருக்கி, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் சீனாவுக்கு நன்மையைக் கொடுக்கும்.
பாதிப்பு மோசம்
கைவினைப் பொருட்களும் முக்கியமான ஒரு துறைதான். 2025ல் அமெரிக்காவிற்கான இந்தியாவின் கைவினைப் பொருள் ஏற்றுமதி $1.6 பில்லியன் ஆகும். இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 40% ஆகும். ஜோத்பூர், ஜெய்ப்பூர், மொராதாபாத் மற்றும் சஹாரன்பூர் என பாதிப்பு பரவலாக இருக்கும்.. வியட்நாம், சீனா, துருக்கி மற்றும் மெக்சிகோ நாடுகள் இதனால் அதிக பயனடையும்.
ஆம்பூர்- ராணிப்பேட்டை பெல்ட்
அடுத்துத் தோல் மற்றும் செருப்புகளின் ஏற்றுமதி.. அமெரிக்காவிற்கான இந்தியாவின் தோல் பொருட்கள் மற்றும் செருப்பு ஏற்றுமதியின் மதிப்பு $1.2 பில்லியன் ஆகும். இதில் 50% வரி விதிக்கப்படும்போது தமிழ்நாட்டின் ஆம்பூர்-ராணிப்பேட்டை, ஆக்ரா, கான்பூர் பாதிக்கப்படும்.
மேலும், விவசாயத் துறை ஏற்றுமதியும் கடுமையாகப் பாதிக்கப்படும். இப்போது பாஸ்மதி அரிசி, தேயிலை, மசாலா பொருட்கள் என $6 பில்லியன் மதிப்பிலான விவசாயப் பொருட்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இவற்றுக்கு இப்போது முழு 50% வரி விதிக்கப்படும். இது பாகிஸ்தான், தாய்லாந்து, வியட்நாம், கென்யா மற்றும் இலங்கை நாடுகளுக்குச் சாதகமாக இருக்கும்.












Click it and Unblock the Notifications