தட்டி தூக்கிய டிரம்ப்.. நழுவ விட்ட ஸ்ரீதர் வேம்பு..! யார் இந்த ஏஐ தொழில்நுட்ப புலி ஸ்ரீராம்
சென்னை: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிகச்சிறந்த ஒருவரை ஏஐ தொழில்நுட்பம் பற்றிய நிபுணத்துவம் கொண்ட ஒருவரை அமெரிக்க ஆலோசனை குழுவுக்கு அதிகாரியாக நியமித்திருக்கிறார் என்று ஸ்ரீராம் கிருஷ்ணனைப் பற்றி பாராட்டி இருக்கிறார்.
அமெரிக்காவின் அதிபராக அடுத்த ஆண்டு டொனால்ட் டிரம்ப் பதவியேற்க இருக்கிறார். அவரது ஆட்சியில் அமெரிக்கக் குடிமக்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து அங்குக் குடியேறிய மக்கள் அச்சத்திலிருந்து வருகின்றனர்.

ஆனால், இதற்கிடையில் இந்தியாவுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லி இருக்கிறது அமெரிக்கா. அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஏஐ தொழில்நுட்ப குறித்த சீனியர் ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அதைப் பற்றிய தகவலை ஸ்ரீராம் கிருஷ்ணன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து பலரும் அவரை வாழ்த்தி வருகின்றனர்.
இதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வெளியிட்டிருந்தார். அதில் செயற்கை நுண்ணறிவு குறித்து முடிவுகளை எடுக்க வெள்ளை மாளிகையின் கொள்கை சீனியர் ஆலோசகராக ஸ்ரீராம் கிருஷ்ணனை அறிவித்திருந்தார்.
முன்னதாக மைக்ரோசாப்ட், யாகூ, ட்விட்டர், பேஸ்புக், ஸ்னாப் ஆகியவற்றில் தயாரிப்பு குழுக்களைத் தலைமை தாங்கி வழிநடத்தியவர்தான் இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன். இவர் அமெரிக்க வெள்ளை மாளிகை AI தொழில்நுட்ப பிரிவில் கிரிப்டோ ஜார் டேவிட் ஓ சாக்ஸுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறார். இந்தப் புதிய பதவி அவரை உலகம் முழுக்க திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அமெரிக்காவின் AI தொழில்நுட்பம் பற்றிய முடிவுகளை எடுக்கும் தலைமை குழுவில் இவர் இடம்பெற்றிருந்தாலும் அவர் அரசின் AI கொள்கையை வடிவமைப்பதிலும் கவனம் செலுத்துவார் என்று சொல்லப்படுகிறது.
இந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் விண்டோஸ் அஸூரின் நிறுவன உறுப்பினராக மைக்ரோசாப்டில் தனது பணியை தொடங்கியவர். சமீப காலம் வரை அவர் ஆண்ட்ரீசென் ஹொரோவிட்ஸ் நிறுவனத்தில் பொது கூட்டாளியாகவும், ஸ்பேஸ்எக்ஸ், ஃபிக்மா, ஸ்கேல்.ஐ ஆகிய நிறுவனங்களில் தனிப்பட்ட முதலீட்டாளராக இருந்தவர். , மெட்டா, எக்ஸ் சமூக ஊடகம், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களில் தலைமைப் பதவிகளை வகித்தவர். ஆகவே, டிரம்ப் சரியாக ஆளைத்தான் கண்டுபிடித்து இந்தப் பதவியை அளித்திருக்கிறார்.

இந்நிலையில் ஜோஹோ தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீதர் வேம்பு அவரது எக்ஸ் தளப் பதிவில் ஸ்ரீராம் கிருஷ்ணனை முன்பே தன் நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்த இருந்ததாகவும் அந்த வாய்ப்பை மிஸ் செய்து விட்டதாகவும் சொன்னது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஸ்ரீதர் வேம்பு தனது பதிவில், "கடந்த 2004 ஆம் ஆண்டு, எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் ஸ்ரீராம் பட்டம் பெற்றபோதே அவரை அறிந்தேன். அவர் அப்போது இந்தியாவில்தான் இருந்தார். நான் அவரை வேலைக்கு அமர்த்த விரும்பினேன். ஆனால், மைக்ரோசாப்ட் ஏற்கனவே அவரை வேலைக்கு அமர்த்தியிருந்தது.
பின்னர் அவர் சிலிக்கான் பள்ளத்தாக்குக்குச் சென்று ஒரு தொழில்முனைவோராக மாறினார். அப்போதும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில்தான் இருந்தோம். இப்போது அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது தொழில்நுட்பக் குழுவிற்கு ஒரு சிறந்த திறமையாளரைக் கண்டறிந்துள்ளார்" என்று கூறியுள்ளார்.

மற்றொரு பதிவில் பர்ப்ளெக்ஸிட்டியின் தலைமை நிர்வாக அதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ், "நான் சந்தித்ததிலேயே ஒரு சிறந்த நெட்வொர்க் கொண்டவர் கிருஷ்ணன் ஸ்ரீராம் . ஆர்வமுள்ள நபர்களில் ஒருவர்" எனக் குறிப்பிட்டுள்ளார். எஸ்.ஆர்.எம்.பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஸ்ரீராம் கிருஷ்ணன், தனது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் 'தி ஆர்த்தி அண்ட் ஸ்ரீராம் ஷோ' என்ற பாட்காஸ்டை இணைந்து நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications