இலாகா மாத்திட்டா புனிதராகிடுவாரா ராஜ கண்ணப்பன்? இதுதான் திராவிட மாடலா?.. டிடிவி தினகரன் நறுக்!
சென்னை: அமைச்சர் ராஜகண்ணப்பனை துறை மாற்றிவிட்டால் அவர் புனிதராகிவிடுவாரா? இதுதான் முதல்வர் ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதியின் பெயரை சொல்லி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் திட்டியதாக புகார் எழுந்தது. இந்த நிலையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைக்கு மாற்றப்பட்டார்.
ஜாதியின் பெயரை சொல்லி திட்டிய ராஜகண்ணப்பனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்காமல் இலாகா மாற்றி கொடுப்பது ஒரு தண்டனை என கேள்வி எழுந்துள்ளது. இதே கேள்வியை டிடிவி தினகரனும் எழுப்பியுள்ளார்.

டிடிவி தினகரன்
இதுகுறித்து டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் திரு.ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? 'எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்' என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா?

சாதிய வன்மம்
சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் திரு.ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்?

இந்தியா
ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா? என டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தனது ட்வீட்டை முதல்வரின் ட்விட்டர் பக்கத்திற்கு டேக் செய்துள்ளார்.

அமைச்சர் பதவி
ஜாதியை பற்றி பேசிய ஒருவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பெரும்பாலானோர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜாதி பெயரை சொல்லி திட்டியது மட்டுமல்லாமல் அவர் மீது சில குற்றச்சாட்டுகளும் இருக்கும் நிலையில் எதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்க வேண்டும் என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications