ஆளுநர் மாளிகை வாசலிலேயே குண்டுவீச்சு.. இனியாவது கண்ணை முழிச்சு பாருங்க.. டிடிவி தினகரன் அட்வைஸ்!
சென்னை: தமிழக ஆளுநர் மாளிகை வாசலில் இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனியாவது கண் விழித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு இன்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ரவுடியான கருக்கா வினோத் என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து குண்டு வீசியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயன்ற கருக்கா வினோத்தை போலீசார், விரட்டிப் பிடித்து கைது செய்தனர்.

கருக்கா வினோத் கடந்த 2022ஆம் ஆண்டு பாஜக அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. கருக்கா வினோத்திடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் நீட் தேர்வு கூடாது என்பதற்காக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியதாக கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய பொறுப்பு வகிக்கும் ஆளுநர் குடியிருக்கும் மாளிகையின் நுழைவாயிலின் முன்பாக பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளில் கவனம் செலுத்தத் தவறிய திமுக ஆட்சியில் நாள்தோறும் கொலை, கொள்ளைச் சம்பவங்கள், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல், போதைப் பொருட்கள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தொடந்து ஆளுநர் மாளிகையின் முன்பே பெட்ரோல் குண்டு வீசும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது.
காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக சீர்குலைந்திருக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் உரிய கவனம் செலுத்தாததே இது போன்ற குற்றச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ காரணமாக அமைந்திருக்கிறது.
எனவே, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இனியாவது கண்விழித்து சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளில் தனிக்கவனம் செலுத்துவதோடு, இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications