பெரும் வேதனை.. முக்கிய வேண்டுகோள் - மருத்துவர் சண்முகப்பிரியா இழப்பு குறித்து டிடிவி
சென்னை: மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்த செய்தி பெரும் வேதனை அளிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழகத்திலும் கட்டுக்கடங்காமல் உள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்த நிலையில், தமிழகத்தில் 27 ஆயிரத்தை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது. இறப்புகளும் அதிகரித்து வருகிறதே தவிர, குறைவது போன்று தெரியவில்லை.
இந்த இக்கட்டான சூழலில், தமிழகத்தில் நாளை (மே.10) முதல் 24ம் தேதி வரை என இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா வைரஸ் பரவலை, இறப்புகளை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று அரசு நம்புகிறது. இந்த நிலையில், மதுரையில் கர்ப்பிணி மருத்துவர் கொரோனாவால் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேல் சிகிச்சை
மதுரை அனுப்பானடி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்தவர் மருத்துவர் சண்முகப்பிரியா. 8 மாத கர்ப்பிணியான இவருக்கு, கடந்த 10 நாட்களுக்கு முன் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சண்முகப்பிரியா, அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவர்கள் சோகம்
கொரோனோ பாதிப்பு தீவிரமடைந்ததன் காரணமாக, 90% க்கும் மேல் அவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் கர்ப்பிணி என்பதால் அவர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. கடந்த ஓராண்டாக கொரோனோ தடுப்பு பணியில் ஈடுபட்டுவந்த அரசு மருத்துவர் சண்முகப்பிரியா, கொரோனோ தொற்றால் உயிரிழந்துள்ள சம்பவம் சக மருத்துவ ஊழியர்களை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.

டிடிவி தினகரன் இரங்கல்
இந்த நிலையில், முன்களப் பணியாளராகச் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவர் சண்முகப்பிரியாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கர்ப்பிணிகள், இணை நோய் இருப்பவர்களை முன் களப்பணிகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்த்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரும் வேதனை
மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். 8 மாத கர்ப்பிணியாக இருந்தபோதும், கொரோனா தடுப்புப்பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருந்த மதுரை அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர். சண்முகப்பிரியா அவர்கள் கொரோனா நோய் தொற்றினால் உயிரிழந்த செய்தி பெரும் வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications