ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தீங்களே? ஜெயக்குமார் வழக்கு என்னாச்சு? - ஸ்டாலினை சீண்டும் டிடிவி!
சென்னை : எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் வாக்கி டாக்கி வாங்கியதில் ஊழல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை மௌனம் காப்பது ஏன்? என டிடிவி.தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மீன்வளத்துறை சார்பாக வாக்கி டாக்கி வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது.
இந்நிலையில், தி.மு.கவும் முதல்வர் ஸ்டாலினும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றத்தான் ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தார்களோ? என்றும் சந்தேகம் கிளப்பியுள்ளார் டிடிவி.தினகரன்.

அதிமுக ஆட்சியில்
கடந்த அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் 37 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மீனவர்களின் நலனை பாதுகாப்பதற்காக, அதிநவீன வசதி கொண்ட வாக்கி டாக்கி வழங்க முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதில்தான் சுமார் 37 கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் மீது குற்றம்சாட்டப்பட்டது.

மு.க.ஸ்டாலின்
அதிமுக ஊழல் தொடர்பாக அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் கடுமையாக குற்றம்சாட்டினார். சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போதும் அதிமுக அமைச்சர்களின் ஊழல்கள் பற்றி பேசி வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 37 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் குற்றம்சாட்டி வந்தார்.

மதுரை ஐகோர்ட் கிளை
திமுக ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த ஊழல் வழக்கில் வேகம் காட்டப்படாத நிலையில், இந்த ஊழலை உடனடியாக விசாரணை செய்யக்கோரிய வழக்கில் அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, இதே புகாருடன் லஞ்ச ஒழிப்புத்துறையில் எத்தனை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன? பெறப்பட்ட மனுக்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள் என்ற விவரத்தை தமிழக அரசு சார்பாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்த பிறகு
இந்நிலையில், இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "பழனிசாமி கம்பெனியின் ஆட்சியில் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் குறித்து தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறை ஓராண்டுக்கு மேலாக மௌனம் காப்பது ஏன்?
Recommended Video

ஊழல் ஒழிப்பு வேஷம்
இது தொடர்பாக புகார் அளித்தவர் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டிய பிறகும் லஞ்ச ஒழிப்புத்துறை மழுப்பலான பதிலை தெரிவித்திருப்பது ஏன்? அப்படியென்றால் தி.மு.கவும் முதலமைச்சர் ஸ்டாலினும் தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றதான் ஊழல் ஒழிப்பு வேஷம் கட்டி வந்தார்களோ? " எனக் கேள்வி எழுப்பியுள்ளார் டிடிவி.தினகரன்.












Click it and Unblock the Notifications