தவறுக்கு பிராயசித்தம்-சட்டசபை கூட்டத் தொடரில் நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றுங்க...தினகரன்
சென்னை: தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.
16-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை சட்டசபையில் உரையாற்றுகிறார்.
அலுவல் ஆய்வு குழு
இதன் பின்னர் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் கூடி சபையை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என தீர்மானிக்கும். வரும் வெள்ளிக்கிழமை வரை சட்டசபை கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளது.
கமல்ஹாசன் வாழ்த்து
இந்த சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்கும் எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பதிவில், 16-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத்தொடர் நாளை முதல் துவங்குகிறது. மக்கள் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை தந்து, அனைத்து அரசியல் தரப்புகளுக்கும் சமவாய்ப்பளித்து, ஆரோக்கியமான விவாதங்கள் நிகழச்செய்யவும், பேரவையின் மாண்பை நிலைபெறச் செய்யவும் உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். என தெரிவித்துள்ளார்.
Recommended Video
நீட் மசோதா
அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தமது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். அதில், தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததை போல, நாளை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே 'நீட்' தேர்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத்தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு பிராயசித்தம்
மேலும் இதன் மூலம், 2010ஆம் ஆண்டு மத்திய அரசில் தி.மு.க அங்கம் வகித்த போது ஏழை,எளிய கிராமப்புற மாணவர்களின் 'டாக்டர்' கனவை சிதைக்கும் ' நீட்' தேர்வை கொண்டுவந்த தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள தற்போது கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்திட வேண்டும் எனவும் தினகரன் பதிவிட்டுள்ளார். முதல் சட்டசபை கூட்டத் தொடரில் என்ன என்ன முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.