மேகதாது அணை- காவிரி உரிமையை கடந்த காலம் போல கோட்டைவிடக் கூடாது- டி.டி.வி. தினகரன்
சென்னை: காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதைத் தமிழக அரசு உடனடியாகத் தடுக்க வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் கூறியுள்ளதாவது:
மேகேதாட்டு பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய அணைக்கான கட்டுமானப் பணிகளை கர்நாடக அரசு தொடங்கியிருப்பதாக வரும் செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன.மத்திய அரசின் அனுமதி பெறாமல் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இப்பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
மேகேதாட்டுவில் கர்நாடகா அணை கட்டிவிட்டால் காவிரியில் துளி தண்ணீர் கூட தமிழகத்திற்கு வராமல் போய்விடும். காவிரி டெல்டா பகுதி மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் முக்கால்வாசி பகுதிகள் குடிநீருக்காக காவிரி நீரை தான் நம்பி இருக்கின்றன.

ஏற்கனவே தி.மு.க ஆட்சிக் காலங்களில் தான் காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் தமிழகம் தன்னுடைய உரிமையை கோட்டைவிட்டு நின்றது. இப்போதும் அப்படி நடந்து விடக்கூடாது
எனவே, தமிழகத்தின் ஆட்சி பொறுப்பு மட்டுமல்லாமல், அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வைத்துள்ள தி.மு.க உடனடியாக செயல்பட்டு, மேகேதாட்டு அணை கட்டுமானப் பணிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு தினகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications