உயரும் விஜய்யின் செல்வாக்கு.. ஒரே குரலில் டிடிவி தினகரன், ஓபிஎஸ்.. உற்று கவனிக்கும் திமுக, அதிமுக!
சென்னை: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கும் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பும் விஜய்யை நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே விஜய்யை பாராட்டி வரும் இரு தரப்பும், டிசம்பர் மாதத்திற்கு பின் தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கும் நிலையில், திமுக, அதிமுக, தவெக மற்றும் நாதக என்று 4 முனைப்போட்டி உருவாகும் என்று கணிப்புகள் வெளியாகி வருகிறது. இதில் திமுக கூட்டணி இணக்கமாக இருந்து வரும் சூழலில், அதிமுக - பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டுவிட்டது. நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று சீமான் அறிவித்துவிட்டார்.

இந்த நிலையில் தவெக தலைவர் விஜய், தனது தலைமையில் மட்டுமே கூட்டணி அமைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். தவெக உடன் இதுவரை எந்தக் கட்சியும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதுதொடர்பாக தவெக நிர்வாகிகளிடம் விசாரித்த போது, விஜய்யின் சுற்றுப்பயணம் முடிவடைந்து, டிசம்பருக்கு பின்னரே கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று கூறி வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் விஜய்க்கு செல்வாக்கு இருப்பதை அத்தனை கட்சிகளுக்கும் நிரூபிக்கும் வகையில் சுற்றுப்பயணம் திட்டமிடப்படுகிறது. இதன் மூலமாகவே கூட்டணிக்கு சில கட்சிகளை இழுக்கவும் அக்கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது. இதுவரை எந்தக் கட்சியும் விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றாலும், சில கட்சிகள் விஜய் தலைமையில் 3வது அணி அமைக்க ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
அதிலும் அமமுக மற்றும் ஓபிஎஸ் ஆகிய இரு தரப்பும் கடைசி நேரத்தில் விஜய்யுடன் செல்ல வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால் அமமுக மற்றும் ஓபிஎஸ் இரு தரப்பையும் அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக இருக்கிறார். இதனை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் உறுதி செய்துள்ளார்.
இதனால் கடந்த சில வாரங்களாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் ஒரே குரலில் விஜய்யை பாராட்டி வருவதாக தெரிகிறது. மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், விஜய் பிரச்சாரத்திற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் அவருடன் சேர்வது தொடர்பாக வெளியாகும் தகவல் வதந்தி தான்.
விஜய்க்கு கூட்டம் கூடுகிறது. இதனை யாராலும் மறுக்க முடியாது.. அது வாக்காக மாறுமா? என்பதை தேர்தல் முடிவுகளை வைத்து சொல்ல முடியும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல் டிடிவி தினகரன் பலமுறை விஜய்யை பாராட்டி பேசி வருகிறார். விஜய்யுடன் செல்லக் கூடாதா என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனால் இருவரின் குரலும் விஜய்யை நோக்கி சாய்வதாக பார்க்கப்படுகிறது.
விஜய்யுடன் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் தரப்பினர் இணைந்தால், தென் மாவட்டங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மிகப்பெரிய சிக்கல் உருவாகும். கடந்த முறை அதிமுக வெல்ல வேண்டிய 23 தொகுதிகளில் அமமுக தனித்துப் போட்டி ஆட்டத்தை களைத்தது. அதனை இம்முறை விஜய் செய்யக் கூடும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications