எடப்பாடி வாய்சில் பேசிய டிடிவி.. பத்த வெச்சுட்டாரே ஆ.ராசா! எம்ஜிஆருக்காக ஒன்றுகூடிய இரு துருவங்கள்
சென்னை: முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரை விமர்சித்துப்பேசிய திமுக எம்பி ஆ ராசாவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்த நிலையில் தற்போது டிடிவி தினகரனும் இதை கண்டித்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது, "மண்ணை விட்டு மறைந்தாலும், மக்கள் மனதில் இன்றளவும் வாழ்ந்து கொண்டு இருக்கும் புரட்சித் தலைவர் அவர்களை பற்றிய திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா அவர்களின் நாகரீகமற்ற பேச்சு கண்டனத்திற்கு உரியது. திமுகவை தீய சக்தி எனக் கூறி தான் உயிரோடு இருக்கும் வரை ஆட்சிப் பொறுப்பிற்கு வர விடாமல் அடியோடு சாய்த்த புரட்சித் தலைவர் அவர்கள் மறைந்த பின்பும் திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்கிறார் என்பதையே ஆ ராசா அவர்களின் தரம் தாழ்ந்த பேச்சு வெளிப்படுத்துகிறது.

தனது இறுதி மூச்சு வரை மக்களுக்காகவே வாழ்ந்து பொது வாழ்வில் நேர்மையின் அடையாளமாக திகழ்ந்த பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களை பற்றியும், இதய தெய்வம் அம்மா அவர்களை பற்றியும் விமர்சனம் செய்ய விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்கள் என பெயர் பெற்ற திமுகவினருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் கட்சியும், ஆட்சியும் இன்று சிக்கித் தவித்துக் கொண்டு இருக்கும் நிலையில், அரை நூற்றாண்டுக்கும் முன்பாகவே அரசியலில் கடைக் கோடி தொண்டனும் உயர்ந்த பதவிக்கு வர முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் என்பதை திமுகவினர் மறந்து விடக் கூடாது.
புரட்சித் தலைவர் அவர்களின் நேர்மையான வாழ்க்கைக்கு, வாழ்நாள் முழுவதும் அவருக்காக கூடிய கூட்டமே சாட்சியாக இருக்கும் போது, அரசியல் காரணத்திற்காக இழிவுப்படுத்தும் நோக்கிலான பேச்சுக்கள், புரட்சித் தலைவர் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் எந்த வகையிலும் களங்கத்தை ஏற்படுத்தாது என்பதை திமுகவினர் உணர வேண்டும். மறைந்த தலைவர்கள் மீது தொடர்ந்து சர்ச்சைக்குரிய விமர்சனங்களை வைத்து வரும் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா அவர்கள் இனியாவது தனது தகுதியை அறிந்து பேச வேண்டும். இல்லை என்றால் அதற்கான பாடத்தை வரும் தேர்தல்களில் மக்கள் புகட்டுவார்கள் என்பதை எச்சரிக்கையாக விடுக்கிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications