கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண் அவமதிப்பு! இந்தியில் பேச கட்டாயப்படுத்துவதா.. தினகரன் கண்டனம்
சென்னை: கோவா விமான நிலையத்தில் ஹிந்தி மொழி தெரியாது என சொன்ன தமிழ் பெண்ணை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மிரட்டியது கண்டனத்துக்குரியது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: கோவா விமான நிலையத்தில் இந்தி தெரியாது எனக்கூறிய தமிழகத்தைச் சேர்ந்த பெண் பயணி, மத்திய பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை வருவதற்காக கோவா விமான நிலையத்திற்குள் வந்த தமிழ்நாட்டு பெண் பயணியிடம், இந்தி தான் தேசிய மொழி, இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தி மொழியை கற்க வேண்டும் என மத்திய பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மிரட்டும் தொணியில் பேசியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பல்வேறு மொழிகளைப் போல இந்தியும் ஒரு அலுவல் மொழியே தவிர தேசிய மொழி கிடையாது என்பதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் பலமுறை தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில் விமான நிலையங்களில் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்படும் வீரர்கள் இந்தி பேசச் சொல்லி பயணிகளை கட்டாயப்படுத்துவதாக வரும் செய்திகள் தொடர் கதையாகி வருகின்றன.
இந்து, முஸ்லீம், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் என பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களையும், பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கியிருக்கும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதை அனைவரும் மீண்டும் உணர வேண்டிய அவசியத்தை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, கோவா மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அனைத்து மொழிகளுக்கும் உண்டான மரியாதை வழங்குவதை உறுதி செய்வதோடு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன: சென்னையை சேர்ந்தவர் ஷர்மிளா ராஜசேகர் (34). இவர் கோவாவில் சுற்றுலா சென்றுவிட்டு தனது 3 வயது குழந்தையுடன் சென்னை திரும்பினார். அப்போது தபோலிம் விமான நிலையத்தில் லக்கேஜ் செக் இன் செய்வதற்காக நின்றிருந்தார். அங்கு பாதுகாப்பு பணிக்காக நின்று கொண்டிருந்த மத்திய தொழில்படை பாதுகாப்பு படை வீரர் மற்றொரு டிரேவை எடுக்குமாறு ஷர்மிளாவிடம் இந்தியில் கூறியுள்ளார். ஆனால் இந்தியில் கூறியதால் ஷர்மிளாவுக்கு புரியவில்லை.
இதனால் அந்த வீரரிடம் நீங்கள் சொல்வது புரியவில்லை என ஷர்மிளா கூறியதற்கு நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என கேட்டு அந்த வீரர் கிண்டல் செய்தாராம். அதற்கு அவர் தமிழ்நாடு என சொன்னதும், தமிழ்நாடு இந்தியாவில் தானே உள்ளது. இந்தி தேசிய மொழி, எனவே கண்டிப்பாக அதை கற்றுக் கொள்ள வேண்டும் என அந்த பாதுகாப்பு படை வீரர் கூறினார். இதற்கு இந்தி தேசிய மொழி கிடையாது. அது அலுவல் மொழிதான் என கூறியுள்ளார். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications