இரும்புப் பெண்மணி ஆண்ட தமிழ்நாடுய்யா.. இப்படி கிண்டல் பன்ற மாதிரி ஆக்கிட்டீங்களே.. டிடிவி
Recommended Video
சென்னை: தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ள புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை வறட்சியில் சிக்கி தவிப்பதற்கு மோசமான நிர்வாகமும், ஊழல் அரசியலுமே காரணம் என்று தமிழக அரசை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கடுமையாக சாடி நேற்று சமூக வலைதளத்தில் கருத்து பதிவு செய்திருந்தார். மேலும் தமிழக மக்கள் சுயநலவாதிகள், கோழைத்தனமானவர்கள் எனவும் கிரண்பேடி தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். கிரண் பேடியை ஆளுநர் பொறுப்பில் இருந்து உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

தினகரன் கண்டனம்
இந்நிலையில் தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்து இருப்பது கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். . ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல என்றும் தினகரன் கடுமையான விமர்சித்துள்ளார்.

பாதுகாப்பது யார்
அப்படி ஏதாவது கேட்க நினைத்தால் அவர் பதிவிட்டுள்ளபடி ‘நிர்வாக திறனற்ற' இந்த ஆட்சியை இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாத்து வருபவர்களிடம் கேள்வி கேட்கட்டும் என தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிறர் கேலி செய்கிறார்கள்
அம்மா என்கிற இரும்புப் பெண்மணி ஆண்ட தமிழகத்தை பிறர் கேலி பேசுகிற நிலைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் ஆளாக்கிவிட்டது வேதனை அளிப்பதாகவும் டிடிவி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

எனது கருத்தல்ல
இதனிடையே புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி, தான் கூறிய கருத்து குறித்து சமூக வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார். என்னை எதிர்த்து அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிந்தேன். நேற்று நான் பதிவிட்டிருந்தது, இது ஒரு கேள்வி மற்றும் பதிலின் வடிவத்தில் வந்த ‘மக்கள் பார்வை' என்று நான் கூறினேன். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய இது உதவுகிறது. நான் மக்களின் கருத்தை பகிர்ந்துள்ளேன். இது எனது தனிப்பட்ட பார்வை அல்ல. இது மக்களின் பார்வை. எனவே இதில் தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். இதனிடையே கிரண் பேடி மன்னிப்பு கேட்கும் வரை அவருக்கு எதிராக புதுச்சேரியில் திமுக போராட்டத்தை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications