கொரோனா தடுப்பு விவகாரம்... தமிழக அரசு சரண்டர் ஆகிவிட்டதோ...? டிடிவி தினகரன் கேள்வி
சென்னை: நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் அவரவர் வீடுகளிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு திடீரென அறிவித்திருப்பது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விவகாரத்தில், 'ஆட்சியாளர்கள் தங்களால் இனி எதுவும் செய்ய முடியாது என கைகளைத் தலைக்கு மேல் தூக்கிவிட்டார்களோ?' என வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

3 நாட்களில் இருக்காது
சென்னை உட்பட தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ‘மூன்றே நாட்களில் கொரோனாவை மொத்தமாக ஒழித்துவிடுவோம்' என்று கடந்த மாதம் சொன்ன முதலமைச்சர் பழனிசாமி, தற்போது ‘ மக்கள் தொகை அதிகமாக இருக்கிறது; தெருக்கள் குறுகலாக உள்ளன; பொதுக்கழிவறைகளைப் பயன்படுத்துகிறார்கள்' என நோய் பரவுவதற்கான காரணங்கள் பற்றிய ‘தமது புதிய கண்டுபிடிப்புகளை' நேற்று வெளியிட்டுள்ளார்.

நிரம்பி வழிகிறது
அதே நேரத்தில், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 4000 படுக்கைகள் மருத்துவமனைகளில் தயாராக இருப்பதாகவும் முதலமைச்சர் கூறியிருக்கிறார். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக சென்னையிலுள்ள அரசு மருத்துவமனைகளில் இடமில்லாத அளவுக்கு நோயாளிகள் நிரம்பி வழிவதாக வரும் செய்திகள் முதலமைச்சருக்குத் தெரியுமா என்று தெரியவில்லை.

கவலையளிக்கிறது
அரசு மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்க முழுமையாக குணமடையாத நோயாளிகளை ‘விருப்பப்பட்டால் வீட்டுக்குச் செல்லலாம்' என்று கூறி அனுப்பிவைக்கும் பொறுப்பில்லாத செயல்களும் நடப்பதாக வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. இவை எல்லாவற்றையும் விட, ‘இனி கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் தங்களை தாங்களே வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். அவர்களுக்கு அவரவர் வீடுகளில் வைத்தே சிகிச்சை அளிக்கப்படும்' என சுகாதாரத்துறை செயலாளர் திடீரென அறிவித்திருப்பது மக்களிடம் பயத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அரசுக்கு கேள்வி
வீட்டிலிருந்தபடியே அவர்கள் சாப்பிட வேண்டிய மருந்துகளையும் அவர் பட்டியலிட்டிருக்கிறார். அப்படியென்றால் இனிமேல் கொரோனாவால் பாதிக்கப்படும் அனைவருக்கும் மருத்துவமனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முடியாத மோசமான நிலைக்கு தமிழக அரசு வந்துவிட்டதா? கொரோனா பேரிடரில், தொடக்கம் முதலே அலட்சியத்தாலும், அகங்காரத்தாலும் எல்லாவற்றையும் மூடி மறைத்தே பேசி வந்த ஆட்சியாளர்கள், இதன்பிறகாவது தங்களின் ‘ஈகோ'வை விட்டொழித்து, உண்மையைக் கூறி மக்களைக் காப்பாற்றத் தேவையானவற்றை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications