பேராசிரியரின் பாலியல் சீண்டல்.. முதுகலை மருத்துவ மாணவி மர்ம மரணம்! நடவடிக்கை என்ன? டிடிவி கேள்வி
சென்னை: குலசேகரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை மாணவி, கல்லூரி வளாக விடுதியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுகலை 2 ஆம் ஆண்டு படித்துவந்த மாணவி, கல்லூரி வளாக விடுதியிலேயே மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக உயிரிழந்த மாணவி கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்திருப்பதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும், தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என உயிரிழந்த மாணவியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
எனவே, மருத்துவ மாணவி உயிரிழப்பு வழக்கில் காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கல்லூரிகளில் மாணவிகள் சுதந்திரமான முறையில் கல்வி பயில ஏதுவான சூழல் நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு டிடிவி தினகரன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
பின்னணி என்ன?: தூத்துக்குடி விடிசி நகரை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகள் சுகிர்தா. 27 வயதாகும் இவர் குமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார்.

விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி கல்லூரி வரவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கல்லூரி முடிந்து விடுதிக்கு திரும்பிய மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஒரு அறையில் சுகிர்தா இறந்த நிலையில் கிடந்தார். இதையடுத்து சக மாணவிகள் கல்லூரி நிர்வாக்திற்கு தெரிவித்தனர். அவர்கள் குலசேகரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த அறையில் போலீஸார் சோதனை செய்த போது அங்கு ஊசியும் மருந்தும் சிக்கியது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் தசையை தளர்வடைய செய்யும் மருந்தை ஊசி மூலம் தனது உடலில் செலுத்திக் கொண்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த நிலையில் சுகிர்தா எழுதியதாக ஒரு கடிதமும் கிடைத்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications