120 வாக்குறுதிகள்.. லிஸ்ட் போட்ட டிடிவி தினகரன்.. விட்டதை பிடிக்க அமமுக ஸ்கெட்ச்
சென்னை: தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகிறார்கள். அமமுக சார்பில் வேட்பாளர்களை அறிவித்து 120 தேர்தல் வாக்குறுதிகளை தினகரன் வெளியிட்டுள்ளார்.
அமமுக சார்பில் தினகரன் வேட்பாளர்களை அறிவித்துள்ளார். மடத்துக்குளம் - சண்முகவேல், சைதாப்பேட்டை - செந்தமிழன், திருச்சி மேற்கு - தொட்டியன் ராஜசேகரன், பெரியகுளம் - கதிர்காமு, ஓட்டபிடராம் - சுந்தர்ராஜன், பூவிருந்தமல்லி - ஏழுமலை, மன்னார்குடி - எஸ். காமராஜ், திருவையாறு - வேலு கார்த்திகேயன், காரைக்குடி - தேர்கொடி பாண்டி, திருப்பத்தூர் - ஞானசேகரன், நாங்குநேரி - இசக்கிமுத்து ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அமமுக வாக்குறுதிகள்
வேட்பாளர்களை அறிவித்த பிறகு தினகரன் செய்தியாளர்களிடம் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகளை வழங்கினார். அப்போது அவர், "சண்முகவேல், செந்தமிழன், கதிர்காமு ஏழுமலை, சுந்தர்ராஜன் ஆகியோர் அம்மாவால் எம்எல்ஏ ஆக்கப்பட்டு அமைச்சர்களாக இருந்துள்ளனர். இப்போதுபோல அன்று அதிமுக கூட்டணியுடன் நின்றிருந்தால் இவர்கள் அப்போதே வெற்றி பெற்றிருப்பார்கள்.
தற்போது ஒன்றாக இணைந்திருப்பால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். மேலும் அமமுக சார்பில் 120 வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. மகளிரை போல ஆண்களுக்கு சுய உதவிக் குழு அமைத்து உதவி செய்யப்படும். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 85 சதவீதம் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
எய்ம்ஸ், மெட்ரோ
விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். 100 நாள் வேலைத் திட்டம் 150 நாள் வேலை வாய்ப்பு திட்டமாக மாற்றப்படும். தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்குவோம். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மற்றும் ஜெயலலிதா பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்துவோம். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முல்லை பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீர் தேக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இயற்கை வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும். காவல்துறை சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்படும். வட மாவட்டங்களுக்கு என்று ஒரு பிரத்யேகமாக ஒரு எய்ம்ஸ் மருத்துவமனை எடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சசிகலாவால் பாதிப்பு
பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வர நடவடிக்கை வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் உயர்த்தி தரப்படும். திமுக காங்கிரஸ் தாரைவார்த்த கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் மீண்டும் சட்ட மேலவை உருவாக்கப்படும். திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும். மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
சசிகலா தரப்பு போட்டியிடுவதால் எங்களின் வெற்றி பாதிக்காது. நான் எங்களுடன் கூட்டணியில் எல்லா கட்சிக்கும் ஆதரவாக பிரச்சாரம் செய்வேன். எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து தஞ்சை, ஆண்டிப்பட்டி உள்ளிட்ட தொகுதிகளில் பிரச்சாரம் செய்வேன். தேர்தலில் வெற்றி பெற்று எங்களின் ஆட்சி அமையும். இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications