இருப்பவர்கள் இருக்கட்டும்... போகிறவர்கள் போகட்டும்... தடுக்க விரும்பாத டி.டி.வி தினகரன்..!
சென்னை: அமமுகவிலிருந்து வெளியேற நினைக்கும் முக்கியப் பிரமுகர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தடுத்து நிறுத்த விரும்பவில்லை.
இருப்பவர்கள் இருக்கட்டும்; போகிறவர்கள் போகட்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்ட அவர் கட்சியிலிருந்து வெளியேறுபவர்களை நினைத்து கவலைப்படுவதில்லையாம்.
இது லிஸ்ட்லயே இல்லையே.. டக்கென ரூட்டை மாற்றும் பாஜக.. மொத்தம் 3 பிளான்கள்.. தடதடக்கும் தென்மண்டலம்
சசிகலாவை ரீ என்ட்ரி கொடுக்க வைப்பதிலும், மகள் திருமண விழாவை சிறப்பாக நடத்துவதிலும் தற்போது தனது முழு கவனத்தை செலுத்தி வருகிறார் தினகரன்.
அமமுக
கடந்த 2017-ம் ஆண்டு மதுரை மாவட்டம் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் டிடிவி தினகரன். அன்று அந்த விழா மேடையில் தினகரனுடன் அமர்ந்திருந்தவர்களின் பெரும்பாலோனோர் அதுவும் குறிப்பாக முக்கியப் பிரமுகர்கள் பலரும் இன்று தினகரனுடன் இல்லை. தனது தளபதிகளில் ஒவ்வொருவராக இழந்து வரும் தினகரன், ஆனாலும் அதற்கெல்லாம் கவலைப்பட்டவராக தெரியவில்லை.
எதிரும் புதிரும்
அமமுக தொடங்கிய போது தனது மாமா மன்னார்குடி திவாகரனுடன் தினகரன் நட்பு பேணினார். ஆனால் அடுத்த சில மாதங்களில் மாமாவும், மருமகனும் எதிரும் புதிருமாக மாறி ஒருவருக்கு ஒருவர் விமர்சிக்கும் வகையில் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுக்கத் தொடங்கினர். அமமுக தொடங்குவதற்கு நிலம் அளித்த மேலூர் சாமி புற்றுநோயால் மறைந்தார். அவரைத் தொடர்ந்து நாஞ்சில் சம்பத் தினகரன் ஆதரவு நிலைப்பாட்டை கைவிட்டார்.
இழப்பு
பின்னர் செந்தில்பாலாஜி, தங்கதமிழ்ச்செல்வன், பெங்களூரு புகழேந்தி, என வரிசையாக தனது கட்சியின் முக்கியப் பிரமுகர்களை இழந்தார். சரி இதற்கு பிறகாவது நிர்வாகிகளை தக்க வைத்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிமுக அமைப்புச் செயலாளரான பழனியப்பன் திமுகவில் இணையவிருக்கும் தகவல் கிடைத்தும் அவரை தடுத்து நிறுத்தவில்லை. இதேபோல் தினகரனுக்காக எம்.எல்.ஏ. பதவியை பறிகொடுத்த மாரியப்பன் கென்னடி, ஜெயந்தி பத்மநாபன், எதிர்க்கோட்டை சுப்பிரமணி, என பலரும் இப்போது திமுக, அதிமுக என சென்றுவிட்டனர்.
பேசவில்லை
அண்மையில் கூட அமமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் ஜெமீலா தன்னை அதிமுகவில் இணைத்துக்கொண்டார். அமமுகவிலிருந்து விலகுபவர்கள் முன்வைக்கும் பொதுவான குற்றச்சாட்டு என்னவென்றால், தினகரன் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை, தேர்தல் முடிவுக்கு பிறகு ஒரு நிர்வாகியிடம் கூட அவர் அழைத்துப் பேசவில்லை என்பது தான்.
ஆர்ப்பாட்டம்
இதனிடையே சசிகலாவின் அரசியல் ரீ என்ட்ரிக்கான பணிகள் தீவிரமாக நடந்துகொண்டிருப்பதால் தினகரன் அமைதி காத்து வருவதாக கூறப்படும் நிலையில், மேகே தாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து வரும் 6-ம் தேதி தஞ்சாவூரில் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளார் தினகரன். இதனிடையே ஊடகங்களை சந்திக்க தயங்காதவர் தினகரன். எப்படிப்பட்ட கேள்வியாக இருந்தாலும் சிரித்துக்கொண்டே பதிலளிக்கும் வழக்கம் கொண்ட இவர், ஊடகங்களை சந்திப்பதையும் அண்மைக்காலமாக முற்றிலும் தவிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.