வோட்டர் ஐடி இல்லேனு திருப்பி அனுப்புறாங்களா? விடாதீங்க, கையில் ஆதார் அட்டை போதுமே.. சூப்பர் அப்டேட்
சென்னை: வாக்காளர் அடையாள அட்டை கைவசம் இல்லை என்றாலே நம்மால் ஜனநாயக கடமையை ஆற்ற முடியாது என்று பலரும் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.. ஆனால் உண்மை அது கிடையாது.. ஒரு குடிமகனின் பெயர் அந்தப் பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் மட்டுமே, அவர் தனது வாக்கைச் செலுத்த சட்டப்படி முழு உரிமை உண்டு.. தகுதியுள்ள ஒருவரும் ஓட்டு போடாமல் போகக்கூடாது என்பதற்காகத்தான் இந்த விதிகள் இருக்கிறது.. எனவே அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், அரசு அங்கீகரித்த இதர ஆவணங்களை காட்டி ஒருவர் தாராளமாக வாக்களிக்கலாம்.. அது என்னென்ன தெரியுமா?
வாக்காளர் அடையாள அட்டை என்பது ஒரு நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஒரு கருவி மட்டுமே.. தேர்தல் சமயங்களில் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்படும்போது உங்கள் பெயர் அதில் துல்லியமாக இருந்தால், அடையாள அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது கைக்கு வந்து சேரவில்லை என்றாலோ கவலைப்படத் தேவையில்லை.

முக்கியமான ஆவணம் ஆதார் அட்டை
இதற்கு மாற்றாக உங்களது ஆதார் அட்டையை மட்டுமே காட்டி உங்களால் மிக எளிதாக வாக்களிக்க முடியும். இன்று பெரும்பாலான மக்களிடம் இருக்கும் இந்த ஆதார் அட்டை ஒன்றே உங்கள் வாக்களிக்கும் உரிமையை உறுதி செய்யப் போதுமானது.
ஆதார் அட்டை மட்டுமின்றி, வாக்காளர்கள் நலன் கருதி இது தவிர இன்னும் 11 விதமான மாற்று ஆவணங்களையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. புகைப்படம் ஒட்டப்பட்ட வங்கி அல்லது அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சகத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீடு ஸ்மார்ட் கார்டுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பணி அட்டை (Job Card) ஆகியவையும் இதில் அடங்கும்...
ஒருவேளை அரசு ஊழியர்களாக இருந்தால், மத்திய அல்லது மாநில அரசு வழங்கிய புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பயன்படுத்தலாம்..
ஸ்மார்ட் கார்டுகள்
அதேபோல் ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணத்தைக் காட்டி வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.. டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு ஆகியவையும் மாற்று ஆவணங்களாக பயன்படுத்தலாம்.. நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அடையாள அட்டைகளும் இதில் அடங்கும்.
மாற்றுத்திறனாளி அட்டையாள அட்டை
இந்த ஆவணங்கள் எதுவுமே உங்களிடம் இல்லை என்றால் கூட, மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் வழங்கிய தனித்துவமான மாற்றுத்திறனாளி அடையாள அட்டையை வைத்து வாக்களிக்கலாம்.
இங்கே கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் கொண்டு செல்லும் ஆவணத்தில் உங்களது போட்டோ ரொம்பவே தெளிவாக இருக்க வேண்டும்..
எழுத்துப் பிழைகள்
வாக்காளர் பட்டியலில் உள்ள பெயரும் உங்கள் ஆவணத்தில் உள்ள பெயரும் ஒத்துப்போக வேண்டும்.. சின்ன எழுத்துப் பிழைகள் இருந்தால் பெரிய பாதிப்பு இருக்காது, ஆனால் ஆள் மாறாட்டம் செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்துவதே அதிகாரிகளின் நோக்கம்.
எனவே வரும் தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை இல்லையே என்று தயங்கி வீட்டில் இருக்காமல், மேலே சொன்ன ஏதோ ஒரு ஆவணத்தை எடுத்துக் கொண்டு வாக்குச்சாவடிக்குச் சென்று உங்கள் உரிமையை நிலைநாட்டலாம்.. ஒரு ஓட்டு கூட முக்கியம்.. அதை தவறவிடாமல் பயன்படுத்தினால் தான் ஜனநாயகம் பலமாகும்..!!!!












Click it and Unblock the Notifications