ஜனநாயக நாட்டுல பணம் இருந்தால் இப்படித்தான் கஷ்டப்படணும்.. குமுறி வீடியோ வெளியிட்ட விஜய் டிவி பிரபலம்
சென்னை: ரூ 2000 நோட்டால் இப்படித்தான் கஷ்டப்பட வேண்டும் என சின்னத்திரை நடிகர் கோதண்டம் தனது மனக்குமுறலை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக கடந்த 2016ஆம் ஆண்டு ரூ 500, ரூ 1000 நோட்டுகள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக வேறு டினாமினேஷன் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டதால் வங்கி வாசல்களில் நிறைய கூட்டம் அலைமோதியது.

இதனால் சில உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இந்த சம்பவத்தை ஆண்டுதோறும் எதிர்க்கட்சிகள் கருப்பு தினமாக அனுசரித்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது ரூ 2000 நோட்டுகள் திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாகவும் இந்த நோட்டுகளின் பயன்பாடு குறைந்துள்ளதாகவும் இதை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. கடந்த மே 23-ஆம் தேதி முதல் இந்த ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் திரும்ப கொடுத்துவிடலாம் என ஆர்பிஐ அறிவித்தது. செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு இந்த நோட்டுகள் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டது.
மேலும் வங்கிகளும் யாருக்கும் ரூ 2000 நோட்டுகளை விநியோகம் செய்ய வேண்டாம் என அறிவிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 10 எண்ணிக்கையிலான ரூ 2000 நோட்டுகளை வரை மட்டுமே மாற்ற முடியும். அது போல் ஒருவர் அதிகபட்சமாக 26 லட்சம் வரை 2000 நோட்டுகளை மாற்ற முடியும் என்றும் அதற்கு மேல் யாரும் மாற்ற முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த நோட்டுகளை ஒரு நபர் 127 நாட்களில் அதிகபட்சமாக 25.40 லட்சம் மதிப்பிலான நோட்டுகளை மாற்ற முடியும் என ஆர்பிஐ வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் விமர்சனங்களை கிளப்பினர். இந்த நிலையில் அண்மையில் சின்னத்திரை காமெடி நடிகர் கோதண்டம் மின்சார வாரியத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு ரூ 2000 நோட்டை கொடுத்துள்ளார். அப்போது அந்த ஊழியர்கள் ரூ 2000 நோட்டை வாங்க மறுத்தனர். இதனால் கோதண்டம் அவர்களுடன் வாக்குவாதம் செய்திருந்தார். இதையடுத்து கோதண்டம் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மின்சார வாரியத்தில் ரூ 2000 நோட்டுகள் கொடுத்தேன்.
அவர்கள் வாங்க மறுக்கிறார்கள். வங்கியில்தான் மாற்ற வேண்டும் என ஊழியர்கள் சொல்கிறார்கள். இதுதான் இப்போது நடக்கிறது. இந்த ஜனநாயக நாட்டில் அரசு அலுவலகத்தில் ரூ 2000 நோட்டுகள் கூட வாங்க மறுத்துவிட்டார்கள். இது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. இதனால்தான் நான் அங்கு அவர்களிடம் வாக்குவாதம் செய்தேன்.
நான் வாக்குவாதம் செய்தவுடன் சிறிது நேரத்தில் அந்த ஊழியர் அவருடைய உயரதிகாரியிடம் பேசுகிறார். அதன் பிறகு அந்த நோட்டை மாற்றிக் கொள்கிறார்கள். இந்திய நாட்டில் அரசு அலுவலகத்தில் 2000 நோட்டை மாற்றக் கூடாது என கூறுகிறார்கள். சாதாரண பாமர மக்கள் கையில் இருப்பது ஓரிரு நோட்டுகள்தான். எனக்கு ஊதியமாக கொடுப்பதும் ஓரிரு நோட்டுகள்தான். அதை கூட மாற்ற முடியாது என்றால் என்ன அர்த்தம். இதுதான் இந்த நாட்டின் நிலைமை. என்னை போல் யாராவது 2000 வைத்திருந்தால் இப்படித்தான் கஷ்டப்பட வேண்டும் என கோதண்டம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications