சென்னை கோயம்பேட்டில் போதையில் போலீசாருடன் ரகளை.. வீடியோ வெளியிட்டு சிக்கிய நிகழ்ச்சி தொகுப்பாளினி
சென்னை: சென்னை கோயம்பேட்டில் போதையில் ரகளை செய்த டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ரேவதி, போலீசார் தன்னை தாக்கியதாக குற்றம் சாட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ அடிப்படையில் விசாரணை செய்த போலீசார், நிகழ்ச்சி தொகுப்பாளினி ரேவதி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக பணியாற்றி உள்ளார். ரேவதியும் அவரது மாமாவும் அண்மையில் கோயம்பேடு சென்றுள்ளனர்.

மது போதையில் போலீசாருடன் வாக்குவாதம்
பார்ட்டிக்கு சென்ற இருவரும் மதுபோதையில் கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகம் அருகே தங்கள் காரை நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு ஹோட்டலில் உணவு வாங்க நின்றதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், தனது மாமா வேஷ்டி அணிந்து இருந்ததை பார்த்து கேலி செய்யும் விதமாக பேசியதாகவும், அதனால் நான் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி, போலீசார் லத்தியால் தன்னை தாக்கியதாகவும் குற்றம் சாட்டி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
ரேவதி வெளியிட்ட வீடியோ
ரேவதி வீடியோவில் பேசும் போது, "என் மாமாவை கேலி செய்யும் விதமாக ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பேசினர். இதனால் எனக்கு கோபம் வந்தது. உடனே இப்படி எல்லாம் பேசாதீங்க என்று அவர்களை நல்லா திட்டிவிட்டேன். நானும் போதையில்தான் இருந்தேன். என் மீது தவறு இருந்தால் ஒரு பெண் போலீஸ் மூலமாக என்னை காவல் நிலையத்திற்கு வரவைத்து என் மீது நடவடிக்கை எடுத்து இருக்கலாம்.
நான் தவறே பண்ணியிருந்தால் கூட போதையில் இருக்கும் ஒரு பெண்ணை லாக்அப்பில் வைத்தோ, அடித்தோ விசாரிக்க எந்த போலீசாருக்கும் உரிமை இல்லை. ஆனால் நேற்று போலீசார் என்னை காட்ட முடியாத இடத்தில் அடித்து இருக்கிறார்கள். நாலு போலீசார் சேர்ந்து எனது பின்பக்கத்தில் அடித்துள்ளனர். நான் அசிங்கமாக பேசியது உண்மைதான்.
போலீசார் பதில் சொல்லியே ஆகனும்
என்னுடைய மாமா பாக்கெட்டில் இருந்த 15 ஆயிரம் ரூபாயையும் செல்போனையும் எடுத்து சென்றுள்ளனர். இப்போ வரைக்கும் ஒரு போன் அங்கு இருந்து வரவில்லை. நான் காலையில் இருந்து 10 வாட்டி போன் போட்டுவிட்டேன். போன் பண்ணி கேட்டால் இழுத்தடிக்கிறார்கள். காசு பற்றி எதுவுமே சொல்லவில்லை. போனை பற்றி எதுவுமே கேட்கவில்லை.
என்னை அடித்ததற்கு போலீசார் பதில் சொல்லியே ஆக வேண்டும். நான் தப்பே பண்ணியிருந்தாலும் கூட அதற்கான தீர்வு இது இல்லை" என்று போலீசாரை குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டு இருந்தார்.இந்த வீடியோ வலைத்தளங்களில் வெளியான நிலையில் உயரதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, உயரதிகாரிகள் என்ன நடந்தது என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
3 பிரிவுகளின் கீழ் வழக்கு
அதில், ரேவதி சம்பவத்தன்று முழு போதையில் போலீசாரை ஆபாசமாக பேசியது தெரியவந்தது. போலீசாரை ஒருமையில் ஏகவசனத்தில் பேசிய ரேவதி, இந்தக் காட்சிகளை படம் பிடித்த ஆட்டோக்காரரையும் சகட்டுமேனிக்கு திட்டினார். இதனால், அங்கு இருந்த ஒருவர் ரப்பர் பைப்பால் ரேவதியை தாக்கியது தெரியவந்தது.
மதுபோதையில் காவல்துறையினரை ஆபாசமாக பேசியது தொடர்பாக சிஎம்பிடி போலீசார், வீடியோ அடிப்படையில் ரேவதி மீது சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஆபாசமாக பேசுதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று சட்டப்பிரிவுகளின் கீழ் சிஎம்பிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரேவதியை கைது செய்தனர். அதேநேரத்தில் ரேவதியை தாக்கிய நபரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications