சர்ச்சையை கிளப்பிய பதிவு.. "ஆளுங்கட்சியை விமர்சித்தால் வழக்கா?” உயர்நீதிமன்றத்தை நாடிய ஆதவ் அர்ஜுனா
சென்னை: சமூக ஊடகத்தில் சா்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா மனு தாக்கல் செய்துள்ளார்.
கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் போலி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் தவறான கருத்துகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், தவெக தோ்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, கரூர் சம்பவம் தொடர்பாக எக்ஸ் தளத்தில், வன்முறையில் ஈடுபட்டு, புரட்சியை உண்டாக்க வேண்டும் என கருத்துகளை பதிவிட்டார். இந்தப் பதிவை சிறிது நேரத்திலே அவர் நீக்கிவிட்டார்.
இந்த பதிவின் அடிப்படையில் ஆதவ் அர்ஜூனா மீது வன்முறையைத் தூண்டுவது, இரு பிரிவினரிடையே பகையை தூண்டுவது, இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவது, வதந்தியை பரப்புவது (BNS 192, 196(1) (b), 197(1) (d), 353(1) (b), 353 (2) உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் சென்னை சைபர் குற்றப் பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், கருத்து பதிவிட்டதன் பின்புலத்தை விசாரித்து ஆதவ் அர்ஜூனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "நான் பதிவிட்ட எக்ஸ் தள பதிவை உடனடியாக நீக்கிவிட்டேன். அந்த கருத்தில் எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த ஒரு அடிப்படை முகாந்திரமும் இல்லாமல் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புகார் குறித்து காவல்துறை முழுமையாக கவனம் செலுத்தவில்லை.
தமிழக அரசின் நிலைமையை விமர்சிப்பது மட்டும் பிஎன்எஸ் சட்டத்தின் கீழ் எந்த குற்றமாகாது. மாநிலத்தை கவிழ்க்க அல்லது இந்திய இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு சதித் திட்டத்திலும் நான் ஈடுபடவில்லை. தீங்கு விளைவிக்கும் சக்திகளுடன் உடந்தையாக நான் இருப்பதாக எந்த வகையிலும் எனது பதிவு பிரதிபலிக்கவில்லை.
ஆளும் ஆட்சியை விமர்சிப்பது எந்தவொரு கிரிமினல் குற்றம் அல்ல. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, என் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிப்பதோடு, வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என ஆதவ் அர்ஜூனா குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நீதிபதி என். சதீஷ்குமார் முன் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications