41 பேரின் குடும்பத்திற்கும்! மாதந்தோறும் ரூ 5 ஆயிரம் நிதி! ஜேப்பியார் மருமகன் மரியவில்சன் அறிவிப்பு
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில் அவர்களது குடும்பத்திற்கு மாதந்தோறும் ரூ 5 ஆயிரம் வழங்கப்படும் என தவெக நிர்வாகியும் ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரியின் தலைவருமான மரிய வில்சன் அறிவித்துள்ளார். 41 பேரின் குடும்பங்களையும் விஜய் தத்தெடுப்பதாக அறிவித்துள்ள நிலையில் மரிய வில்சனும் இவ்வாறு நிதியுதவியை அறிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தின் போது கரூர் வேலுச்சாமிபுரத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100- க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூ 10 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

அது போல் 41 குடும்பங்களுக்கும் சேர்த்து ரூ 1 கோடி நிதியுதவியை காங்கிரஸ் கட்சி அறிவித்தது. மத்திய அரசு சார்பில் தலா 2 லட்சம் நிதியுதவியும் மக்கள் நீதி மய்யம் சார்பில் தலா ரூ 1 லட்சம் நிதியுதவியும் விசிக சார்பில் தலா 50 ஆயிரம் நிதியுதவியும் அறிவிக்கப்பட்டது. இவற்றில் சில வழங்கப்பட்டும் விட்டது.
இந்த நிலையில் விஜய்யும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ 20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். அது போல் காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கப்படுகிறது. இது தொடர்பாக கரூர் மாவட்ட காவல் துறையிடம் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேட்டு கடிதம் அளிக்கப்பட்டிருந்த நிலையில் தவெக சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் இதுகுறித்து டெல்லியில் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்த போது, கரூரில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினரையும் விஜய் தத்தெடுத்து வாழ்நாள் முழுவதும் உடன் பயணிக்கவுள்ளார் என்றார்.
இந்த நிலையில் ஜேப்பியார் மரிய வில்சன் ஒரு உதவித் தொகை அறிவித்துள்ளது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கல்வித் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பு வழங்க முடிவு செய்துள்ளார்.
மேலும் ஆயுள் காப்பீடு செய்து தருவது மாதந்தோறும் ஒவ்வொரு குடும்பத்தின் வங்கிக் கணக்கிற்கும் ரூ 5000 சேரும்படி வாழ்நாள் முழுவதும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கான முதல்கட்ட வேலைகள் நேற்று முதல் தொடங்கியுள்ளன.

இதற்காக ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு கரூர் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவுள்ளார்கள். தங்களது உதவி உரிய நேரத்தில் சென்றடையவும், சரியான முறையில் பலன் அளிப்பதை உறுதி செய்யவும் முன்னேற்பாடுகள் செய்ய இருக்கிறார்கள். இதுகுறித்து மரிய வில்சன் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் பகிர்ந்தது கவனத்தை ஈர்த்துள்ளது.
எம்ஜிஆர் காலத்து கல்வித் தந்தை ஜேப்பியாரின் மகள் ரெஜினாவின் கணவர்தான் இந்த மரிய வில்சன். இவர்களுக்கு ஜேப்பியார் கல்லூரி, சத்யபாமா பல்கலைக்கழகம், பனிமலர் கலைக் கல்லூரி உள்ளிட்டவை உள்ளன. 1990 களில் இருந்து படிப்படியாக உயர்ந்த மரிய வில்சன், தற்போது தொழில்நுட்பக் கல்லூரிகளின் தலைவராக உள்ளார். இவர் கடந்த ஜூன் மாதம் தவெகவில் இணைந்தார்.












Click it and Unblock the Notifications