மாபெரும் 'பயணம்'... முட்டுக்கட்டை போட்ட SOP? ஜெகன் ஸ்டைலில் இறங்கி அடிக்கும் விஜய்! வெளியான சீக்ரெட்
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், பெரிய நகரங்களில் மட்டும் ஒரு மாபெரும் 'ரோடு ஷோ' (Road Show) நடத்தத் திட்டமிட்டு வருகிறாராம்.
ஜெகன் மோகன் ரெட்டி பாணியில் இதை மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளாராம். காரில் பயணம் செய்யாமல்.. நேரடியாக சாலையில் யாத்திரை பாணியில் நடந்து செல்ல திட்டமிட்டு வருகிறாராம். இந்த நிலையில்தான், தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு (SOP) எதிராக அவரது கட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.

திட்டமிடப்படும் 'வெற்றிப் பயணம்'
விஜய் தனது கட்சியின் பலத்தை நிரூபிக்க சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களை மையமாக வைத்து ஒரு பிரம்மாண்ட நடைப்பயணம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. திருச்சியில் இந்தப் பயணத்தைத் தொடங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். மதுரையில் தென்மாவட்ட மக்களின் ஆதரவைத் திரட்ட அங்கே ஒருநாள் நடைப்பயணம் செய்வார். கோவையிலும் ஒருநாள் நடைபயணம் செய்வார். இறுதியில் சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டத்துடன் முடிக்கத் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தேர்தலுக்கு முன்பாக மக்களை நேரடியாக சந்திப்பதே இதன் முக்கிய நோக்கம். இது காரில் செல்லாமல் நேரடியாக சாலையில் நடந்து செல்வது ஆகும்.
வழக்கு ஏன்? - TVK முன்வைக்கும் வாதங்கள்
இதன் காரணமாகவே கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசியல் நிகழ்வுகளுக்கான புதிய SOP-யில் உள்ள சில விதிகள், புதிய கட்சிகளை நசுக்கும் வகையில் இருப்பதாகத் தமிழக வெற்றிக் கழகம் குற்றம் சாட்டுகிறது. குறிப்பாக இரண்டு முக்கிய அம்சங்களை அவர்கள் எதிர்க்கின்றனர்:
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கே முன்னுரிமை (Clause 6c): ஒரு குறிப்பிட்ட நாளில், ஒரே இடத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கட்சிகள் கூட்டம் நடத்த அனுமதி கோரினால், சட்டமன்றத்தில் பலம் கொண்ட 'அங்கீகரிக்கப்பட்ட' கட்சிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என அந்த விதி கூறுகிறது. இது தங்களைப் போன்ற வளர்ந்து வரும் புதிய கட்சிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என தவெக வாதிடுகிறது.
கூட்ட நெரிசலுக்கான பொறுப்பு (Clause 8g1): 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்வுகளில், பாதுகாப்பையும் கூட்ட நெரிசலையும் கட்டுப்படுத்தும் முழுப் பொறுப்பையும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களே ஏற்க வேண்டும் என அரசு கூறுகிறது. சட்ட ஒழுங்கைப் பராமரிக்க வேண்டியது அரசின் கடமை என்றும், இந்தப் பொறுப்பை மக்கள் இயக்கங்கள் மீது சுமத்துவது ஜனநாயக விரோதம் என்பதும் விஜய்யின் வாதம்.
பின்னணி என்ன?
கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட நெரிசலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை அடுத்து, இத்தகைய நிகழ்வுகளுக்குக் கடுமையான விதிகளை வகுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே இந்த SOP கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், விஜய்யின் 'ரோடு ஷோ' திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடவே இந்த விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக விஜயின் ஆதரவாளர்கள் கருதுகின்றனர். இந்த வழக்கின் தீர்ப்பு, விஜய் திட்டமிட்டுள்ள பிரம்மாண்ட பயணத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications