Senthil Balaji: செந்தில் பாலாஜி முதல் விஜய் வரை! "ஓட்டு" போடாத முக்கிய கட்சி வேட்பாளர்கள் யார் யார்?
திருச்சி: தவெக தலைவர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் உள்பட முக்கிய கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும் தங்களுக்கு ஓட்டு போட முடியவில்லை.
திருச்சி கிழக்கு தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய், தி.மு.க. எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ், அ.தி.மு.க. வேட்பாளர் ராஜசேகரன் ஆகிய மூவராலும் தங்களுக்கு வாக்களிக்க இயலவில்லை. விஜய்க்கும் இனிகோவுக்கும் சென்னையில் வாக்கு உள்ளது. ராஜசேகரனின் வாக்கு திருச்சி மேற்கு தொகுதியில் பதிவாகியுள்ளது.

ஓட்டு போடாதவர்கள் யார்
இவர்களைப் போலவே, லால்குடி அ.தி.மு.க. வேட்பாளர் லீமா ரோஸ் கோவை வாக்காளர். அதே தொகுதியின் த.வெ.க. வேட்பாளர் கு.ப.கிருஷ்ணனுக்கு ஸ்ரீரங்கத்தில் வாக்கு. துறையூர் காங். வேட்பாளர் லெனின் பிரசாரத்துக்கு ஸ்ரீரங்கத்திலும், த.வெ.க. ரவிசங்கருக்கு மண்ணச்சநல்லூரிலும் வாக்குகள் உள்ளன.
மணப்பாறை ம.ம.க. அப்துல் சமதுக்கு செங்கல்பட்டிலும், முசிறி தி.மு.க. கருணைராஜாவுக்கு திருச்சி மேற்கிலும், த.வெ.க. விக்னேஷுக்கு லால்குடியிலும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஸ்ரீரங்கம் த.வெ.க. வேட்பாளர் ரமேஷூக்கும் அத்தொகுதியில் வாக்கு இல்லை. திருச்சி மேற்கு தொகுதியில் அமைச்சர் நேருவை எதிர்த்துப் போட்டியிடும் அ.தி.மு.க. கூட்டணி ராஜசேகரன் ஸ்ரீரங்கத்தில் வாக்காளர். அமைச்சர் நேருவின் மகன் எம்.பி. அருண், திருச்சி தில்லைநகரில் வசித்தாலும், அவரது வாக்கு லால்குடி காணக்கிளியநல்லூரில் உள்ளதால், தந்தைக்கு வாக்களிக்க இயலாத நிலை இருந்தது.
தமிழக சட்டசபைத் தேர்தலில் 85 சதவீதம் வாக்குப் பதிவு நடந்துள்ளது. தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 73 லட்சத்து 43 ஆயிரத்து 291 ஆகும். இதில் 2 கோடியே 80 லட்சத்து 30 ஆயிரத்து 658 பேர் ஆண்கள், 2 கோடியே 93 லட்சத்து 4 ஆயிரத்து 905 பேர் பெண்கள், 7 ஆயிரத்து 728 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவர்.
தமிழக சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்றது. தேர்தலில் மொத்தம் 4 ஆயிரத்து 23 வேட்பாளர்கள் களமிறங்கினர். தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
ஓட்டு போடாத செந்தில் பாலாஜி
சட்டசபைத் தேர்தலில் கோவை தெற்கு தொகுதியின் திமுக வேட்பாளராகக் களமிறக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, வாக்குப் பதிவு நாளில் தனது வாக்கைச் செலுத்தவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக கரூரில் போட்டியிட்டு வந்த செந்தில் பாலாஜி, கோவையில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கத்துடன் இம்முறை கோவை தெற்கு தொகுதியில் களமிறக்கப்பட்டார்.
ஆனால், கோவை தெற்கு தொகுதியில் அவர் போட்டியிட்டாலும், அவரது வாக்கு கரூர் தொகுதியில்தான் இருந்தது. வாக்குப் பதிவு நாளான நேற்று, செந்தில் பாலாஜி காலை கரூருக்குச் சென்று தனது வாக்கைச் செலுத்திவிட்டு கோவை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கரூருக்கு போகவில்லை
ஆனால், அவர் கரூருக்குச் செல்லாமல் அன்று முழுவதுமே கோவையிலேயே தங்கிவிட்டார். இதன் காரணமாக, அவர் சட்டசபைத் தேர்தலிலும் தனது வாக்கைச் செலுத்தவில்லை.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறுகையில், "செந்தில் பாலாஜி நேற்று ஓட்டுப் போடுவதற்காக கரூருக்குச் செல்லவில்லை. அவர் கோவையிலேயே தங்கியிருந்தார். வாக்குப் பதிவு சமயத்தில் கோவை தெற்கு தொகுதியில் தேவையற்ற பதற்றம் ஏற்பட்டால், தாம் அதனை முன்நின்று சமாளிக்க வேண்டும் என்று அவர் கருதியிருக்கலாம்.
கோவை தெற்கில் குடியேறினார்
தேர்தலுக்கு முன்னரே அவர் கோவை தெற்கு தொகுதியில் குடியேறினார், வாக்குப் பதிவு நாளிலும் கோவையிலேயே இருந்தார்; கரூருக்குச் செல்லவில்லை" என்று விளக்கம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications