தேர்தலுக்கு முன்பே.. முக்கியமான "வாரில்" தோற்ற விஜய்.. தவெக இப்பவும் சுதாரிக்கலைனா.. போச்சு!
சென்னை: "விஜய் வருவாரு... புதிதாக அரசியல் செய்வாரு!" - இது தவெக தொண்டர்கள் பலரின் கனவாக இருந்தது. ஆனால், சினிமாவில் 'வசூல் ராஜா'வாக வலம் வந்த விஜய், யதார்த்த அரசியல் களத்தில் 'வாக்கு ராஜா'வாக மாறுவதில் ஏகப்பட்ட சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக சந்தித்து வரும் பின்னடைவுகள் குறித்த ஒரு 'க்ளோஸ்-அப்' பார்வை...

கூட்டணி இல்லா 'தனி ஒருவன்'!
அரசியலில் 'தனித்து போட்டி' என்பது ஒரு துணிச்சலான முடிவுதான். ஆனால் கூட்டணிக்கு யாரும் வராமல் தனித்து விடப்படுவது துணிச்சல் அல்ல.. அது சரிவு. விஜய் தனியாக நிற்கவில்லை. அவர் தனித்து விடப்பட்டு உள்ளார். திராவிடக் கட்சிகளின் மெகா கூட்டணிகளை எதிர்க்க இது போதுமா? திமுக பக்கம் ஒரு பெரும் படையே அணிவகுத்து நிற்கிறது. அதிமுக-வும் கூட்டணிக் கணக்குகளை வலுவாக்கிவிட்டது. . ஆனால் விஜய்? "நாங்கள் யாருடனும் கூட்டணி இல்லை" என அறிவித்துவிட்டாலும், சிறிய கட்சிகள் கூட தவெக-வை நோக்கி வராதது அரசியல் விமர்சகர்களைப் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. 'பவர் ஷேரிங்' என்ற ஆயுதத்தை கையில் எடுத்தும், களம் இன்னும் கைகூடவில்லை.
தாமதமாகும் 'கிரவுண்ட் ஒர்க்'
தேர்தல் தேதி நெருங்கும் நிலையில், திமுக-வின் ஐடி விங் முதல் அதிமுக-வின் கிளைக் கழகங்கள் வரை பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கின்றன. ஆனால், தவெக-வில் இன்னும் வேட்பாளர் தேர்வு, பூத் கமிட்டி அமைத்தல் போன்ற அடிப்படைப் பணிகள் ஆமை வேகத்திலேயே நகர்வதாகப் பேச்சு.
"ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்கிரிப்ட் ரெடியாக இல்லையென்றால் ரீ-டேக் வாங்கலாம். ஆனால், தேர்தல் களத்தில் ரீ-டேக் கிடையாது!" என முணுமுணுக்கிறார்கள் ரத்தத்தின் ரத்த... மன்னிக்கவும், விஜயின் தம்பிகள்.
கேம்பைன் எங்கே?
விஜய் ஒரு மாஸ் ஹீரோ என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அந்த மாஸ் ஓட்டாக மாற வேண்டுமானால், அவர் மக்களிடையே அதிக நேரம் செலவிட வேண்டும். இதுவரை நடந்த ஓரிரு பொதுக்கூட்டங்களைத் தவிர்த்து, தீவிரமான தேர்தல் பரப்புரையை விஜய் இன்னும் தொடங்காதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. மாதம் ஒரு முறை மக்களை பார்த்தால் அதை வைத்து எப்படி அரசியல் செய்ய முடியும். மறுபுறம், முதலமைச்சர் ஸ்டாலின் முதல் எடப்பாடி பழனிசாமி வரை ஒவ்வொரு மாவட்டமாகத் தவம் கிடக்கிறார்கள். ஆனால் விஜய் வீட்டிலேயே இருக்கிறார்.
வேட்பாளர் தேர்வில் குழப்பம்?
வேட்பாளர் பட்டியல் குறித்த ஊகங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இன்னொரு புறம் தகுதியான முகங்களைத் தேர்வு செய்வதில் தவெக திணறுவதாகத் தெரிகிறது. "விஜய் முகம் போதும்" என்கிற தாரக மந்திரம், தொகுதிகளில் செல்வாக்குள்ள உள்ளூர் அரசியல் புள்ளிகளைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்குமா? என்ற கேள்வி எழுகிறது.
முடிவாக...
தமிழக அரசியல் களம் எப்போதும் 'இரட்டை முகங்களை' (திராவிடக் கட்சிகள்) கொண்டது. அதை உடைக்கப் புகுந்த 'விஜய்க்கு, தற்போதைய 'பெர்சப்ஷன் வார்' ஒரு பெரும் சவால். அதில் வெல்ல வேண்டிய விஜய் இப்போது தொற்றுக்கொண்டு இருக்கிறார். வெறும் சினிமா இமேஜை வைத்து மட்டும் கோட்டையைப் பிடித்துவிட முடியாது என்பதை விஜய் எப்போது உணரப்போகிறார்?
தவெக-வின் இன்ஜின் ஸ்டார்ட் ஆகிவிட்டது, ஆனால் கியர் இன்னும் விழவில்லை என்பதே இன்றைய 'நிலவரம்'!












Click it and Unblock the Notifications