தவெக - காங்கிரஸ் கூட்டணி? விஜய்யின் விருப்பமும் அதுதான்.. பற்ற வைத்த நாஞ்சில் சம்பத்!
சென்னை: தவெகவுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்புவதாக அக்கட்சியின் பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். தவெக - காங்கிரஸ் கூட்டணி அமைந்தால், இரு கட்சிகளுக்கும் லாபம் என்று கூறிய நாஞ்சில் சம்பத், கூட்டணியை விஜய் அறிவிப்பார் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையிலான கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படாமல் உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை கனிமொழி நேரில் சென்று சந்தித்துவிட்டார். இருப்பினும் இன்னும் கூட்டணி தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை.

அதேபோல் காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சென்னை வந்துள்ளார். திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அமைக்கப்பட்ட குழுவுடன் கிரிஷ் சோடங்கர் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆனால் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக இதுவரை திமுக தரப்பில் ஒரு குழு கூட அமைக்கப்படவில்லை.
இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் முதல்வர் ஸ்டாலினுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதனால் திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்ற கேள்வியும் உள்ளது. இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சியின் சில நிர்வாகிகள் தவெகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். இதனிடையே ராகுல் காந்தி கரூர் சம்பவத்தின் போது விஜய்யுடன் பேசி இருந்தார்.
காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தியும் விஜய்யுடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இந்த நிலையில் தவெக பரப்புரை செயலாளர் நாஞ்சில் சம்பத் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு நேர்காணல் கொடுத்துள்ளார். அதில் நாஞ்சில் சம்பத் பேசுகையில், இந்தியாவின் வலிமையான தலைவர் ராகுல் காந்தி. அவரின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாஜக திணறி வருகிறது.
தென்னிந்தியாவை தனது கைகளில் வைத்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. ஏற்கனவே கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நாளை கேரளா காங்கிரஸ் கட்சி ஆட்சி அமையும். இதனால் புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வளர்வதற்கு காய்களை நகர்த்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் முடிவிற்கு முகமாகவும், முதுகெலும்பாகவும் விஜய் இருப்பார்.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க விஜய்யும் விரும்புகிறார். விரைவில் கூட்டணி தொடர்பாக அறிவிப்பார். தவெக - காங்கிரஸ் கூட்டணி இயல்பாக அமைவதற்கான சூழல் கனிந்து வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் தவெகவுக்கு ஆதரவான சூழல் நிலவி வருகிறது என்று தெரிவித்துள்ளார். கிரிஷ் சோடங்கர் சென்னையில் முகாமிட்டுள்ள சூழலில், நாஞ்சில் சம்பத்தின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications