விஜய்யின் தெளிவற்ற அரசியல்.. தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்குமா? சசிகாந்த் செந்தில் பதில்!
சென்னை: தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணி பிரியும் சூழல் நிலவி வருகிறது. திமுக ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால், தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வரும் நிலையில், விஜய்யின் தவெக ஒரு தெளிவற்ற அரசியலை செய்து வருவதாக அக்கட்சியின் எம்பி சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மோதல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்பி மாணிக்கம் தாகூர் ஆட்சியில் பங்கு கோரி வரும் நிலையில், அக்கட்சித் தலைமை இதுவரை கண்டித்ததாக தெரியவில்லை. அதேபோல் ராகுல் காந்தியின் நண்பராக அறியப்படும் பிரவீன் சக்ரவர்த்தியும் விஜய்யுடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார்.

அதன்பின் திமுகவை சீண்டும் வகையில், தமிழக அரசின் கடனை உத்தரப் பிரதேசத்துடன் ஒப்பிட்டு பதிவிடுகிறார். இது திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் தவெக நிர்வாகிகளும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் காங்கிரஸ் - தவெக கூட்டணி உருவாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
இந்த நிலையில் விஜய்யின் தவெக ஒரு தெளிவற்ற அரசியலை செய்து வருவதாக காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சசிகாந்த் செந்தில் பேசுகையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் யாரும் அதிகாரப்பூர்வமாக விஜய்யை சந்திக்கவில்லை. யாராவது தனிப்பட்ட முறையில் சந்தித்தால், அதற்கு காங்கிரஸ் பொறுப்பேற்காது.
திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி சிந்தாந்த ரீதியிலான கூட்டணி. அதேபோல் விஜய்யின் தவெக கட்சியால் இந்த தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. குறைந்த சதவிகித வாக்குகளை மட்டுமே அவர்களால் பெற முடியும். கொள்கை, செயல்பாடுகளில் ஒரு தெளிவற்ற அரசியலை அவர்கள் செய்து வருகின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் தவெக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், திமுக - காங்கிரஸ் கூட்டணியின் வெற்றியை பாதிக்காது என்று தெரிவித்துள்ளார். விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் பேசத் தொடங்கி இருக்கும் சூழலில், சசிகாந்த் செந்தில் நேரடியாக விஜய்யை அட்டாக் செய்திருப்பது விவாதமாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications