நல்லவேளை நான் கர்ப்பமாக இல்லை! கிறிஸ்துமஸ் விழாவில் ராஜ்மோகன் அதிரடி பேச்சு
சென்னை: நல்லவேளை நான் கர்ப்பமாக இல்லை என தவெக துணை பொதுச் செயலாளர் ராஜ்மோகன் கலகலப்பாக தெரிவித்திருந்தார். அதிலும் அவர் கிறிஸ்துமஸ் விழாவில் அவ்வாறு பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவெக சார்பில் மாமல்லபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் விஜய் கலந்து கொண்டார். மேலும் கிறிஸ்துவ பேராயர்கள், அருளாளர்கள், ஆற்காடு நவாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது இந்த விழாவில் பேசிய ராஜ்மோகன், "நான் வரும்போது பார்த்தேன். சாலைகள் மேடு பள்ளம், குண்டும் குழியுமாக உள்ளன. நல்லவேளை நான் கர்ப்பமாக இல்லை. இருந்திருந்தால் 2 முறை பிரசவம் ஆகியிருக்கும்" என தெரிவித்திருந்தார்.
ராஜ்மோகன் ஆறுமுகம் என்பவர் ஒரு நடிகர், ஸ்டான்ட் அப் காமெடியன், இயக்குநர், தொலைக்காட்சி நெறியாளர், மோட்டிவேஷனல் ஸ்பீக்கர் என பன்முகத் திறமை கொண்டவர்.
இவர் விஜய் டிவியில் நடத்தப்பட்ட தமிழ் பேச்சு எங்கள் மூச்சு எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டில் வின்னரானதை அடுத்து அவர் பிரபலமடைந்தார். 2017ஆம் ஆண்டு நீட் தேர்வை எதிர்த்து அரியலூர் அனிதா தற்கொலை செய்து கொண்ட போது ராஜ் மோகன் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதாவது அவரது Put Chutney எனும் யூடியூப் சேனலில் Who killed Anitha (அனிதாவை கொன்றது யார்) என்ற கேள்வி எழுப்பிய வீடியோ வைரலானது. அவர் அதில் கல்வியில் உள்ள சமநிலையற்ற தன்மை உள்ளிட்டவற்றை கண்டித்து பேசியிருந்தார்.
அது போல் 2018ஆம் ஆண்டு காவிரி தண்ணீர் விவகாரத்தில் தமிழகத்தில் போராட்டம் நடந்த போதும் அவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். இவர் கொரோனா காலத்தில் யூடியூப் சேனலில் சமூகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து வீடியோ போட்டிருந்தார்.
இவர் "மெரினா புரட்சி" என்ற படத்தில் நடித்துள்ளார். "பாபா பிளாக் ஷீப்" என்ற படத்திலும் நடித்துள்ளார். "வேலையில்லா பட்டதாரி", "நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா", "ஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்", "நட்பே துணை", "நான் சிரித்தால்" உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைந்து துணை பொதுச் செயலாளராக உள்ளார். கரூரில் தவெக பிரச்சாரத்தின் போது 41 பேர் பலியான சம்பவத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் தலைமறைவாகினர். அவர்களது பெயர் எஃப்ஐஆரில் இருந்தது.
ஆனால் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்த ராஜ்மோகன் சோசியல் மீடியா பக்கமே வராமல் எந்த கருத்தையும் பதிவிடாமல் இருந்ததால் அவர் தலைமறைவானதாக விமர்சனங்கள் எழுந்தன. இது தொடர்பான மீம்ஸ்களும் பகிரப்பட்டிருந்தன.
இந்த நிலையில்தா் ராஜ்மோகன் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டிருந்தார். அதில் "வேதனையில் இருந்து மீள முடியவில்லை. முடியாது என்றே தோன்றுகிறது. அதேசமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.
இந்த அமைதியைப் பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும்.
நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்று தருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்" என்று ராஜ்மோகன் பதிவிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications