திமுக கூட்டணி தயவில் தவெக அரசு! மா.செ. கூட்டத்திலும் விஜய்யை வறுத்தெடுத்த ஸ்டாலின்
சென்னை: திமுக கூட்டணிக் கட்சிகளின் தயவால்தான் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்துள்ளது என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் சூரியன் இல்லாமல் எதுவும் நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், திமுக கூட்டணி கட்சிகளின் தயவால்தான் தமிழக வெற்றிக் கழகம் அரசு அமைந்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் தோல்விக்கு நானே முழு பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இதற்கு எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.
தேர்தல் தோல்விக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதாலும் குறை சொல்வதாலும் முடிவு வராது. சூரியன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது. திரும்ப உதித்தே தீரும். சூரியன் இல்லாமல் ஒன்றும் நடக்காது என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஸ்டாலின் உற்சாகமாக பேசியதாக சொல்லப்படுகிறது.
முதல்வர் ஜோசப் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். தொடக்கத்தில் 108 எம்.எல்.ஏ.க்களைக் கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்தின் பலம், முதல்வர் ஜோசப் விஜய் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் 107 ஆகக் குறைந்தது.
மேலும், திருப்பத்தூர் தொகுதியில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் தற்போது 106 ஆக உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் (5), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (2), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (2), விடுதலை சிறுத்தைகள் கட்சி (2), இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (2) ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளன.
இக்கட்சிகளின் ஆதரவுடன், தமிழக வெற்றிக் கழகத்தின் மொத்த பலம் சட்டசபையில் 119 ஆக உயர்ந்துள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க 118 இடங்கள் மட்டுமே தேவை என்பதால், தற்போதைய பலம் போதுமானது. இந்த நிலையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு 144 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்து பெரும்பான்மை கோரிய தீர்மானத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications