தவெக மாவட்ட செயலாளர்கள் நியமனத்தில் சிக்கல்.. திணறும் விஜய்.. நிர்வாகிகள் அதிருப்தி.. என்ன நடந்தது?
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் 6ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்களின் பட்டியல் இன்று வெளியாகவுள்ளது. 25 மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட வேண்டிய சூழலில், இன்றும் 19 மாவட்டச் செயலாளர்களின் பட்டியலே வெளியாகும் என்று கூறப்படுகிறது. மீதமுள்ள 6 மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில் பல்வேறு சிக்கல் எழுந்துள்ளது தெரிய வந்துள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், விக்கிரவாண்டியில் பிரம்மாண்ட மாநாடு நடத்தப்பட்டது. இதன்பின் பனையூரில் இருந்து அரசியல் செய்து வந்த விஜய், தொடர்ந்து பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்களை சந்தித்து ஆதரவு அளித்தார்.

இதன்பின் தவெக தலைவர் விஜய் நிர்வாகிகள் நியமனத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஜனவரி மாத இறுதியில் தொடர்ச்சியாக ஒரு வாரம் நிர்வாகிகளை சந்தித்த தவெக தலைவர் விஜய், நிர்வாக வசதிக்காக மொத்தமாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். அதன்பின் ஒவ்வொரு நாளும் 19 மாவட்டச் செயலாளர்களை நியமனம் செய்து அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் தவெக சார்பாக மொத்தமாக 95 மாவட்டச் செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இதன்பின் தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தவெக சார்பாக விரைவாக பூத் கமிட்டி மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். இதனை ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இதனிடையே 25 மாவட்டச் செயலாளர்களின் நியமனத்தை விரைவாக முடிக்க தவெக தலைவர் விஜய் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று தவெக சார்பாக 25 மாவட்டச் செயலாளர்களின் அறிவிப்பு வெளிவரும் என்று பார்க்கப்பட்டது. ஆனால் இன்று தவெக சார்பாக வெறும் 19 மாவட்டச் செயலாளர்களின் நியமனம் தொடர்பான அறிவிப்பு மட்டுமே வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்களை நியமிப்பதில் சிக்கல்கள் நிலவி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சில மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் விதிகள் கடைபிடிக்கப்படவில்லை என்று சர்ச்சை எழுந்தது. ஒரே தொகுதிகள் சீனியர்கள் பலரும் இருப்பதால், மாவட்டச் செயலாளர்கள் நியமனத்தில் இழுபறி நீடித்து வருகிறது.
இதனால் நிர்வாகிகள் நியமனத்திற்கு பின் மாவட்டச் செயலாளர்கள் அதிகரிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஏற்கனவே தவெக தலைவர் விஜய்-க்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்கள், மக்கள் இயக்கத்தில் பணியாற்றியவர்கள், பணபலம் கொண்டவர்கள் என்று பலரும் போட்டியில் இருப்பதால், 6 மாவட்டங்களில் மாவட்டச் செயலாளர்கள் நியமிக்க முடியாமல் தவெக திணறி வருகிறது.












Click it and Unblock the Notifications