நீட் தேர்வு விவகாரம்.. விஜய் மத்திய அரசின் நிலைப்பாட்டை கேள்வி கேட்கணும்.. திருமாவளவன் கருத்து
சென்னை: நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் போன்றோர் மத்திய அரசின் தமிழக மக்களுக்கு எதிரான விரோதமான நிலைப்பாட்டை விமர்சிக்க முன் வராமல், தமிழ்நாட்டு அரசின் மீது குறை கூறுவது வியப்பாக உள்ளது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பணிகளை ஆளுங்கட்சியான திமுக தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே திமுக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் வரும் 17ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக தெரிய வந்துள்ளது. இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொங்கலன்று வேட்பாளரை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் எதிர்க்கட்சியான அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், தற்போது மீண்டும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்திருப்பது அக்கட்சி தொண்டர்களை சோர்வடைய வைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், அதிமுக ஒவ்வொரு தேர்தல்களிலும் போட்டியிட வேண்டும். வெற்றி, தோல்வியை பற்றி கருத்தில் கொள்ளாமல் தேர்தலை சந்திக்க வேண்டும். அதிமுக தமிழ்நாட்டை ஆட்சி செய்த கட்சி. தற்போது வலிமையான எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. அதனால் இடைத்தேர்தலை தவிர்ப்பது சரியான நிலைப்பாடு அல்ல.
இந்த நிலைப்பாடு பாஜகவுக்கும், பாஜகவை ஊக்கப்படுத்துகிற கட்சிகளுக்கும் சாதகமாக அமைந்துவிடும். இதனால் அதிமுக ஒருவேளை மறைமுக செயல்திட்டத்தை வைக்கிறதா என்ற சந்தேகமும் எழுவதாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து நீட் தேர்வு குறித்த தமிழக அரசின் பதிலுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் விமர்சனம் குறித்த கேள்விக்கு, தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளது.
சட்டப்பேரவையில் ஒருமுறைக்கு இரண்டு முறை நீட் தேர்வு ரத்து மசோதாவை நிறைவேற்றி அனுப்பி இருக்கிறது. ஆனால் மத்திய அரசு இதுவரை பொருட்படுத்தவில்லை. தமிழக அரசு செய்ய வேண்டிய வேலை நடந்திருக்கிறது. மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்துகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை அவமதிக்கிறது. அதனால் நண்பர் விஜய் போன்றோர் மத்திய அரசின் தமிழக மக்களுக்கு எதிராக விரோதமான நிலைப்பாட்டை விமர்சிக்க முன் வராமல் தமிழ்நாட்டு அரசின் மீது குறை கூறுவது வியப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications