கரூர் வழக்கில் அமுதா ஐஏஎஸ் சொன்ன முக்கிய பாயிண்ட்! பிரச்சார வாகனத்தை மாற்றும் விஜய்! எந்த வண்டி?
சென்னை: தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தும் பேருந்தை மாற்றிவிட்டு வேறு வாகனத்தை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த பிரச்சார பேருந்தில் என்னென்ன வசதிகள் இருக்கிறது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
தவெக தலைவர் விஜய், வரும் 2026ஆம் ஆண்டு நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலை குறி வைத்து கட்சியை தொடங்கியுள்ளார். இந்த நிலையில் அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

அதன்படி அவர் பயணம் செய்ய ஏதுவாக கேரவன் போன்ற அனைத்து வசதிகளும் கொண்ட பேருந்து ஒன்று தயார் செய்யப்பட்டது. இந்த பேருந்தில் ஓய்வறை, மீட்டிங் நடத்தும் அறை, கழிப்பறை, உணவருந்து கூடம், சோஃபா, படுக்கை அறை என கேரவனில் இருப்பது போன்று ஏராளமான வசதிகள் உள்ளன. அது போல் பேருந்தை சுற்றி நவீன ரக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பேருந்தை சுற்றி விஜய் படம்
அந்த பேருந்தை சுற்றி விஜய் படத்துடன் அவரது கட்சியின் கொள்கை தலைவர்களான பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர் ஆகியோரின் படங்களும், எம்ஜிஆர், அறிஞர் அண்ணாவின் படங்களும் இடம் பெற்றிருந்தனர்.
உங்கள் விஜய்
அது போல் உங்கள் விஜய் நா வரேன் என்ற வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. பேருந்தின் நிறம் மஞ்சள், சிவப்பு நிறத்தில் இருந்தது. இந்த நிலையில் மாஸாக இருந்த இந்த பேருந்தில்தான் தவெக தலைவர் விஜய் பயணம் செய்து மக்களை சந்தித்தார்.
எடப்பாடி பழனிசாமி பேருந்து
எடப்பாடி பழனிசாமி "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். அவர் பயன்படுத்தும் பிரச்சார வாகனம் பச்சை நிறத்தினாலானது. இதைத்தான் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஒருத்தர் பச்சை பஸ்ஸில் போறாரு, இன்னொருத்தர் மஞ்சள் பஸ்ஸில் போறாரு, ஆனால் கடைசியில் ஜெயிக்க போவது பிங்க் நிற பேருந்துதான் என விமர்சித்திருந்தார்.
வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம்
இந்த நிலையில் விஜய் தனது பிரச்சார பேருந்தில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் பிரச்சாரம் செய்த போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். இந்த கூட்ட நெரிசலுக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் விஜய்யின் நீளமான பேருந்து மக்கள் கூட்டத்தில் புகுந்ததே என்ற ஒரு காரணமும் சொல்லப்பட்டது.
நீளமான வாகனம்
அகலமான, நீளமான கேரவன் வாகனம் குறுகிய சாலையை அடைத்துக் கொண்டதால்தான் கூட் நெரிசல் ஏற்பட்டது என்று தமிழக அரசின் செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கரூர் சம்பவத்தால் மறு அறிவிப்பு வரும் வரை பிரச்சாரங்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டாம் என தவெக தலைமை நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வேறு வாகனத்திற்கு மாறும் விஜய்
இந்த நிலையில் பிரச்சனைகள் சரியாகி மீண்டும் பிரச்சாரத்திற்கு செல்லும் போது பேருந்திற்கு பதிலாக டெம்போ டிராவலர் வாகனத்தில் பயணிக்க விஜய் முடிவு செய்துள்ளாராம். இதனால் ஆயுத பூஜையான நேற்று முந்தைய தினம் டெம்போ டிராவலர் வாகனத்திற்கும் விஜய் பயன்படுத்திய பேருந்திற்கும் சென்னை பனையூர் அலுவலகத்தில் பூஜை போடபபட்டது. எனவே இனி விஜய் டெம்போ டிராவலரில் பிரச்சார பயணம் செய்வார் என்று தெரிகிறது. இதை கூறி, பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அது போல் விஜய்க்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிகிறது.












Click it and Unblock the Notifications