விஜய் நிகழ்த்தப்போகும் பெரிய மாற்றம்.. அமைச்சர் நிர்மல் குமார் சஸ்பென்ஸ்!
மதுரை: சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைத்துவிட்டது. ஒருவாரத்தில் ஏராளமான சர்ச்சைகள் தவெகவை வட்டமடிக்கின்றன. தேர்தல் அறிக்கையின்படி மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்காதது, அதிமுகவில் ஒரு பிரிவினரை அமைச்சரவையில் இணைப்பது, ஜோதிடருக்கு அரசுப்பதவி என்று கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. இந்நிலையில் ஒரு சில நாட்களில் பெரிய மாற்றம் நடக்க போவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிர்மல்குமார் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சட்டம் ஒழுங்கு சரியாக சென்று கொண்டிருக்கிறது. முதலமைச்சர் ஒவ்வொரு நாளும் எந்த இடத்தில் செயல்பாடுகள் எப்படி உள்ளன என்பதை துறை ரீதியாக ஆய்வு செய்து வருகிறார். ஒரு சில நாட்களில் பெரிய மாற்றங்களை பார்ப்பீர்கள். தினமும் காலை 10 மணியில் இருந்து மாலை வரை தலைமை செயலகத்தில் இருந்து பணியாற்றுகிறார்.

தலைமை செயலகத்திலேயே மதிய உணவை சாப்பிடுகிறார். இந்த மாதிரி ஒரு முதலமைச்சர் பார்த்ததில்லை என்று பலரும் சொல்கிறார்கள். ஆய்வின் அடிப்படையில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கிறார். எந்த அமைச்சருக்கு எந்த துறை சரியாக இருக்கும் என்பதை அவர் தான் முடிவு செய்வார். மாற்றி மாற்றி 50 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்துள்ளனர்.
எல்லாவற்றையும் உடனடியாக மாற்றிவிட முடியாது. நிர்வாக ரீதியாக முழுமையாக ஆய்வு செய்துதான் நடவடிக்கை எடுக்க முடியும். பதவியேற்ற முதல் நாளே எல்லாவற்றையும் ஆய்வு செய்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம் என அறிவித்துள்ளார். ஒவ்வொரு நாளும் அந்தப் பணியை செய்கிறோம். இது மிகப்பெரிய பணி. ஒவ்வொரு துறையும் அதிக நெருக்கடியில் உள்ளது.
ஆய்வுக்கு பிறகு முதலமைச்சர் ஒவ்வொரு வாக்குறுதியாக செயல்படுத்துவார். இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நிதிநிலை அறிக்கையில் தான் திட்டங்களுக்கு நிதி ஒதுக்க முடியும். நிதி ஆதாரத்தை தெரிந்து கொள்வது அவசியம். சட்டமன்றத்தில் இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் உள்ளனர். மக்களின் தேவையை அறிந்து செயல்படுகிறோம்.
தேவையான போது எங்கள் தலைவர் முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திப்பார். என்ன நடக்கிறது என்பதை தினசரி அரசு செய்தி குறிப்பு வெளியிடுகிறது. செய்தியாளர் சந்திப்பு என்பது கட்டாயமில்லை. முதல்வர் என்ன பணி செய்கிறார் என்பதை வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்கிறார். தேவையான போது செய்தியாளர்களை சந்திக்க அவர் தயங்க மாட்டார்" என்றார்.












Click it and Unblock the Notifications